சகோதரிகளை மணந்து 21 பிள்ளைகளை பெற்றெடுத்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், அவர்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் அதிகம் கேட்கும் கேள்விகள், உங்கள் காதல் வாழ்க்கையும் தாம்பத்ய வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதாகத்தான் இருக்கிறது.
அப்படித்தான் அமெரிக்காவில் வாழும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான Carmen மற்றும் Lupita Andrade (23)ஐ பார்ப்பவர்கள் எல்லாம் கேள்விகள் கேட்க, பதில் சொல்லி சொல்லி வெறுத்துப்போன இருவரும், தங்களிடம் மக்கள் அதிகம் கேட்கும் கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் வீடியோவாக சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, அந்த வீடியோ 9.8 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
21 பிள்ளைகளைப் பெற்றெடுத்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் புகழ்பெற்றவர்கள் சயாமீஸ் இரட்டையர்கள் (Siamese twins) என அழைக்கப்படும் சாங் மற்றும் எங் (Chang and Eng Bunker) சகோதரர்கள்.
முன்பு சயாம் என அழைக்கப்பட்ட, தற்போதைய தாய்லாந்து நாட்டில் பிறந்ததால் சயாமீஸ் இரட்டையர்கள் என அழைக்கப்பட்ட சாங் மற்றும் எங் சகோதாரர்கள், தங்கள் ஊரில் சாதாரணமாக வாழ்ந்துவந்த நிலையில், ஸ்கொட்லாந்து நாட்டவரான Robert Hunter கண்ணில் பட்டார்கள்.
அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவந்த Hunter, அவர்களை வைத்து கண்காட்சிகள் நடத்த, மக்கள் அவர்களைக் காண கூட்டம் கூட்டமாக வரத்துவங்க, அவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கத் துவங்கியது.
அந்த காலகட்டத்தில், சாங் மற்றும் எங் சகோதாரர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இருவரையும் அறுவை சிகிச்சை செய்து பிரித்தால் அவர்கள் பிழைப்பார்களா என்பது குறித்து விவாதங்கள் நடத்தினார்களாம். அப்போது, பிரபல பிரித்தானிய அறுவை சிகிச்சை நிபுணரான Sir Astley Cooper, இந்தப் பிள்ளைகள் இப்படி சேர்ந்து இருப்பதால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது, அவர்கள் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள், அப்புறம் எதற்காக அவர்களைப் பிரிக்கவேண்டும் என்றாராம்!
திருமண வாழ்க்கை
சாங் மற்றும் எங் சகோதாரர்கள், சகோதரிகளான Adelaide மற்றும் Sarah Yatesஐ மணந்துகொண்டு 21 பிள்ளைகளைப் பெற்றெடுத்துள்ளர்கள். Chang, Adelaide தம்பதிக்கு 10 பிள்ளைகள், Eng, Sarah தம்பதிக்கு 11 பிள்ளைகள்.
வழக்கம்போல, அது எப்படி இரட்டையர்கள் இரண்டு பெண்களை மணந்துகொண்டு தனித்தனியே தங்களுக்கு பிள்ளைகள் பெற்றுக்கொள்ளமுடியும் என சிலர் கேள்வி எழுப்ப, சகோதரிகள் தனித்தனியே பிரிய, வெவ்வேறு வீடுகளில் வாழும் தத்தம் மனைவியருக்காக நேரத்தைப் பிரித்து செலவிட்டு, தங்கள் குடும்பங்களை சந்தோஷமாக பார்த்துக்கொண்டார்களாம் சாங் மற்றும் எங் சகோதாரர்கள்.
மரணம்
சரியாக 150 ஆண்டுகளுக்கு முன் சாங் மற்றும் எங் சகோதாரர்கள் மரணமடைந்துள்ளார்கள். சாங் முன்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1874ஆம் ஆண்டு, தனது 62ஆவது வயதில் தூக்கத்திலேயே மரணமடைந்துள்ளார்.
மறுநாள் காலை அவரை எழுப்பிய எங்கின் மகன்களில் ஒருவர், பெரியப்பா இறந்துவிட்டார் என்று கூற, அதிர்ச்சியடைந்துள்ளார் எங். இரண்டு மணி நேரம் கழித்து அவரும் மரணமடந்துவிட்டாராம்.
அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை அறிவதற்காக, அவர்களுடைய மனைவிகளிடமிருந்து அவர்களுடைய உடல்களை வாங்கிய மருத்துவர்கள் அவர்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்ய, சாங் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. தன் சகோதரன், தன் உடலில் மறுபாதி, மரணமடைந்ததால் பயத்தில் எங் இறந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகின.
ஆனால், சாங் மரணமடைந்ததும், எங் உடலிலிருந்து சாங் உடலுக்குச் சென்ற இரத்தம் மீண்டும் திரும்பாததால் எங் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவத்துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |