திடீரென 70,000 அமெரிக்கர்களின் கணக்குகளை முடக்கிய Twitter! எதற்கு தெரியுமா?
ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க கேபிடல் கலவரத்துக்கு தொடர்புடைய 70,000 கணக்குகளை இடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் திகதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த வரலாற்றுமிக்க கலவரத்தில் ஒரு கேபிடல் காவல் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கேபிடல் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது.
ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவி பிரமாணம் செய்யவுள்ள நிலையில், அதே நாளில் அல்லது அதற்குறப்பட்ட நாட்களில் மீண்டும் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது.
இந்நிலையில், QAnon உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு முதன்மையாக அர்ப்பணிக்கப்பட்ட 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் திங்கட்கிழமை மாலை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, QAnon உள்ளடக்கத்தைப் பகிர்ந்த கணக்குகளை முற்றிலுமாக நீக்குவதாக கூறியதையடுத்து, சில காரணங்களுக்காக 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக முடங்கியுள்ளது.
கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியதையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து, சந்தை மதிப்பில் 5 பில்லியன் டொலர்களை இழந்தது.
இதற்கிடையில், அமேசான் நிறுவனமும் QAnon தொடர்பான அனைத்து பொருட்களையும், தயாரிப்புகளையும் விற்பனைக்கு தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
