குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகள்: மர்மம் விலகாமல் குழம்பும் அதிகாரிகள்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகள் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு பொலிசார் உதவி கோரியுள்ளனர்.
சவுதி அரேபியாவை சேர்ந்த 24 வயது அஸ்ரா அப்துல்லா அல்செஹ்லி மற்றும் அமல் அப்துல்லா அல்செஹ்லி(23) ஆகிய சகோதரிகள் இருவர் ஜூன் 7ம் திகதி சிட்னியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாக, அவர்களின் மரணம் தொடர்பில் அதிகாரிகளுக்கு துப்புத்துலங்காமல் மர்மம் நீடித்து வருகிறது. இதனையடுத்து, அவர்களின் பெயர் மற்றும் தகவல்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சகோதரிகள் இருவரும் தங்கியிருந்த குடியிருப்பில், அவர்களுக்கான அஞ்சல் பெட்டியில் கடிதங்கள் குவிந்திருப்பதை அறிந்த குடியிருப்பு மேலாளர் சந்தேகத்தின் பேரில் பொலிசாருக்கு தகவல் அளித்த நிலையிலேயே சகோதரிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, சகோதரிகள் இருவரும் நான்கு வாரங்களாக தங்களது குடியிருப்பில் வாடகை செலுத்தத் தவறிவிட்டதும், அவர்கள் தொடர்பில் விசாரிக்க பொலிசாரை தூண்டியுள்ளது. இருவரது சடலமும் அழுகிய நிலையில் காணப்பட்டதால், இருவரும் இறந்து சில வாரங்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
மேலும், அவர்களது குடியிருப்புக்குள் அத்துமீறி எவரும் நுழைந்த அடையாளங்களும் காணப்படவில்லை, அவர்கள் உடலில் காயங்களும் இல்லை என்பதால், இந்த வழக்கு அதிகாரிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
2017ல் அவுஸ்திரேலியாவுக்கு வந்த இரு சகோதரிகளும் அகதிகள் சேவை மூலமாக அகதி அந்தஸ்து கேட்டு முறையிட்டு வந்துள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.