மேலும் 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா! யார்.. யார்? இலங்கை மருத்துவ ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்
இலங்கையில் மேலும் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிருஷ்ணப்ப கௌதம் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக இலங்கை மருத்துவ ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 2-1 என்ற வெற்றி கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என கைப்பற்றி இலங்கை அணி பதிலடி கொடுத்தது.
2வது டி-20 போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் குர்ணல் பாண்டியாவுடன் தொடர்பிலிருந்த ஹர்திக் பாண்டியா உட்பட 9 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர், இதனால் இலங்கைக்கு எதிரான 2வது மற்றும் 3வது டி-20 போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட 9 இந்திய வீரர்களுக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கௌதம் மற்றும் சாஹலுக்கு தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட வீரர்களைத் தவிர, தொற்று பாதிப்பு இல்லை என உறுதியான இந்திய வீரர்கள் விரைவில் இலங்கையிலிருந்து புறப்படுவார்கள் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.