அமெரிக்க முற்றுகைப் பகுதி வழியாக வெளியேறிய ஈரானின் மிகப்பெரிய இரு எண்ணெய் கப்பல்
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஈரான் - அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் முதல் முறையாக ஈரான் எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய் கப்பல்கள்
ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்படுவது மற்றும் ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படவுள்ளது ஆகியவை உலகளாவிய எரிபொருள் சந்தைகளில் நம்பிக்கையை அதிகரித்ததுடன், கச்சா எண்ணெய் விலையை வெகுவாகக் குறைத்துள்ளன.

இந்த நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா தங்கள் மோதலுக்கான இறுதித் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை வெள்ளிக்கிழமையன்று சுவிட்சர்லாந்தில் தொடங்கவுள்ளன.
இதனிடையே, எண்ணெய் கப்பல்களைக் கண்காணிக்கும் சேவை ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்கக் கடற்படையின் முற்றுகைக்கு உட்பட்டிருந்த பகுதியிலிருந்து இரண்டு மிகப் பெரிய எண்ணெய் கப்பல்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் ஈரான் தனது முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
ஜூன் 15 ஆம் திகதி பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் ஈரானின் டியோனா மற்றும் ஹீரோ 2 ஆகிய இரு மிகப் பெரிய எண்ணெய் கப்பல்கள் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகைப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்த இரு கப்பல்களும் மொத்தமாக 3.8 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் கொண்டு சென்றுள்ளது. Stream என்ற ஈரானின் இன்னொரு எண்ணெய் கப்பலும் பாகிஸ்தானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் இருந்து அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை எல்லைக்கு அருகே நெருங்கியது.
குறித்த கப்பலானது கடந்த ஏழு வாரங்களாக ஈரானிய கடல் பகுதிக்குள் நுழைவதற்காகக் காத்திருந்தது. அமெரிக்காவும் ஈரானும் ஒரு விரிவான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயாராகி வரும் வேளையில், இந்த இராஜதந்திர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் கப்பல் போக்குவரத்து
சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் விடுதியில் நடைபெறும் உத்தியோகப்பூர்வ கையெழுத்திடும் நிகழ்வைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கி, 60 நாட்கள் கால அளவிற்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பேச்சுவார்த்தைகளில் ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் சர்வதேசத் தடைகளை நீக்குவதற்கான செயல் திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ், ஈரானின் வெளிவிவகார துணை அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி மற்றும் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரால் அந்த வரைவு ஒப்பந்தம் ஏற்கனவே மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கையெழுத்திடும் நிகழ்வில் காலிபாஃப் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதேவேளையில், வேன்ஸ் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். ட்ரம்ப்பும் இதில் கலந்துகொள்ளக்கூடும் என்று வேன்ஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து பிரென்ட் கச்சா எண்ணெய் 5.1 சதவீதம் சரிந்து ஒரு பேரலுக்கு 79 டொலருக்கும் சற்றுக் குறைவாக விற்பனை ஆனது, அதே நேரத்தில் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் 5.8 சதவீதம் சரிந்து ஒரு பேரலுக்கு 76 டொலருக்கும் சற்றே அதிகமாக விற்பனை ஆனது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |