இந்தியாவுக்கு பயணத் தடை விதித்தது அமீரகம்! யார் யாருக்கு மட்டும் விலக்கு?
கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருவதால் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுக்கு பயணத் தடை அறிவித்துள்ளன.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதால், ஞாயிற்றுக்கிழமை முதல் 10 நாட்கள் இந்தியாவில் இருந்து பயணம் செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.
இந்த பயணத் தடை ஏப்ரல் 24 சனிக்கிழமை இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும், மேலும் 10 நாட்களுக்குப் பிறகு அது மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகளும் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்படும் விமானங்கள் தொடர்ந்து இயங்கும், மேலும் ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்கள், டிப்ளோமாட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் ஆகியோருக்கு இந்தத் தடை கிடையாது என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ஏப்ரல் 24 முதல் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இந்தியாவில் ஆகிய நாடுகளில் இருந்து பயணிப்பதை தடை செய்வதாக ஓமன் அரசு அறிவித்துள்ளது.