அமெரிக்கா-ஈரான் பதற்றம்: இராணுவ தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்காத பிரித்தானியா
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இராணுவ தாக்குதல்களை நடத்துவதற்காக பிரித்தானிய ராணுவ தளங்களைப் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது.
ஆனால், பிரித்தானிய அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று பிபிசி செய்தி தெரிவிக்கிறது.
முன்னதாக அமெரிக்கா, கிளோஸ்டர்ஷையரில் உள்ள RAF Fairford தளம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள Diego Garcia தளத்தை மத்திய கிழக்கு நடவடிக்கைகளில் பயன்படுத்தியிருந்தது.
இம்முறை ஈரான் அணு ஆயுத திட்டத்தை கட்டுப்படுத்த வற்புறுத்தும் முயற்சியில், அமெரிக்கா மீண்டும் அந்த தளங்களை பயன்படுத்த விரும்புகிறது.
ஆனால், பிரித்தானிய அரசு “இது தொடர்பான செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது” என்று கூறி அனுமதி மறுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “அடுத்த 10 நாட்களில் ஈரானுடன் ஒப்பந்தம் நடைபெறுமா அல்லது இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை உலகம் அறியும்” என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “ஈரான் அணு ஆயுதம் உருவாக்கக்கூடாது. பிராந்தியத்தின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை” என்று வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், ஈரான் போராட்டக்காரர்களை அடக்கி கொல்வது ‘கொடூரம்’ எனவும் அவர் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், லிபரல் டெமோக்ராட் தலைவர் எட் டேவி, “ட்ரம்ப், பிரித்தானிய அரசை அழுத்தம் கொடுத்து தளங்களைப் பயன்படுத்த முயல்கிறார். இதுபோன்ற முடிவுகளை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |