புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் திரும்பப் பெற மறுக்கும் நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்ய முடிவெடுக்கபப்டும் என உள்விவகார செயலர் தெரிவித்துள்ளார்.
30,000 பேர்கள்
இந்த விவகாரம் தொடர்பில் Five Eyes எனபப்டும் கூட்டணி நாடுகளுடன் விவாதிக்கப்படும் என உள்விவகார செயலாளரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தங்கள் குடிமக்களைத் திரும்பப் பெறாத நாடுகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய கூட்டணி நாடுகளுடன் ஆலோசிக்கப்படும் என்றார்.
ஆண்டு பிறந்து 8 மாதங்களில் மட்டும் 30,000 பேர்கள் சிறு படகுகளில் கால்வாய் கடந்துள்ளனர். மட்டுமின்றி, நாட்டின் உள்விவகார செயலாளராக ஷபானா மஹ்மூத் பொறுப்பேற்ற நாளில் மட்டும் 1,000 பேர்கள் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.
இந்த நிலையில், தங்களுடன் ஒத்துழைக்காத நாடுகளுக்கான விசா அனுமதியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலுவான அணுகுமுறை
சிறு படகுகளில் பிரித்தானியாவில் நுழையும் மக்களை எவ்வாறேனும் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார். இந்த முடிவானது ஏற்கனவே அரசாங்கத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது, மேலும் நமது எல்லையைப் பராமரிப்பதற்கு ஒரு வலுவான அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன் என்றும் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா ஏற்கனவே அல்பேனியா, இந்தியா, வியட்நாம் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட சுமார் ஒரு டசின் நாடுகளுடன் புகலிடக்கோரிக்கையாளர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுக்கும் நாடுகள் விசா விண்ணப்பங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |