ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை தளர்த்திய பிரித்தானியா., உக்ரைன் எச்சரிக்கை
ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது.
பிரித்தானியாவில், ரஷ்யாவின் கச்சா எண்ணெயிலிருந்து உருவாக்கப்படும் டீசல் மற்றும் ஜெட் எரிபொருளை மூன்றாம் நாடுகள் வழியாக இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது.
இந்நிலையில் பிரித்தானிய அரசு அந்த தடைகளைத் தற்காலிகமாக தளர்த்தியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரால் ஹார்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் போக்குவரத்து முடங்கியிருப்பதன் காரணமாக, இந்த முடிவை எடுத்துள்ளது.

முதலில், 2025 அக்டோபரில் அறிவிக்கப்பட்ட இந்தத் தடைகள், ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டன.
ஆனால், எரிபொருள் விலை அதிகரிப்பும், விநியோக சிக்கல்களும் காரணமாக, அரசு தற்போது படிப்படியாக அமுல்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த தளர்வு மூலம் இந்தியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் தயாரிப்புகள், குறிப்பாக ஜெட் எரிபொருள், பிரித்தானியாவிற்கு தொடர்ந்தும் வர அனுமதி அளிக்கப்படுகிறது.
இதனால், ரஷ்யாவிற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் அபாயம் இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் விலை, போருக்கு முன் டன் ஒன்றுக்கு 831 டொலராக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 1,838 டொலர் வரை உயர்ந்தது.
தற்போது 1,375 டொலர் என்ற அளவில் உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் கூடுதல் செலவினால் பாதிக்கப்படுகின்றன, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தளர்வு குறித்த விளக்கமளித்துள்ள பிரித்தானிய அரசு, “இது தற்காலிக அனுமதி மட்டுமே, முழுமையான தடைகள் விரைவில் அமுல்படுத்தப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் சில கூட்டாளிகள், இது ரஷ்யாவிற்கு ஆதரவாகும் நடவடிக்கை என விமர்சனம் செய்கின்றனர்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, “ரஷ்ய எண்ணெய்க்கு செலுத்தப்படும் ஒவ்வொரு டொலரும் போருக்கான நிதி” என்று எச்சரித்துள்ளார். அதேநேரம், “உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு உறுதியானது” என்று பிரித்தானியா மறுபடியும் வலியுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#UK #Russia #OilSanctions #FuelPrices #UkraineWar #JetFuel #EnergyCrisis #MiddleEastConflict