பறக்கும் விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியின் உயிரைக் காத்த இந்தியர்
தன் தாயுடன் இந்தியாவுக்குப் பயணித்துக்கொண்டிருந்த மருத்துவர் ஒருவருக்கு, தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் ஒன்று கிடைத்தது.
நடுவானில் மாரடைப்பு ஏற்பட்ட பயணி
பர்மிங்காமிலுள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்த Dr விஷ்வராஜ் (Dr Vishwaraj Vemala, 48), தன் தாயுடன் விமானத்தில் இந்தியாவுக்குப் பயணித்துக்கொண்டிருந்தபோது, சக பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
லண்டனிலிருந்து இந்தியா நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தின் பணியாளர்கள் விமானத்தில் மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா என தேட, Dr விஷ்வராஜ் அந்த 43 வயது நோயாளியைக் காப்பாற்ற விரைந்திருக்கிறார்.
NHS FOUNDATION TRUST
வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம்
எனது மருத்துவப் பயிற்சியின்போது உயிர்காக்கும் சிகிச்சை குறித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால், நடுவானில், விமானத்தில், 40,000 அடி உயரத்தில் நான் அதைச் செய்ததில்லை என்கிறார் Dr விஷ்வராஜ்.
விமானத்தில் இருந்த முதலுதவி கிட்டின் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி மாரடைப்பு வந்த நபரைக் காப்பாற்றியிருக்கிறார் Dr விஷ்வராஜ்.
ஆனால், மீண்டும் அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இம்முறை அவரைக் காப்பாற்ற Dr விஷ்வராஜ் நீண்ட நேரம் போராட வேண்டியிருந்திருக்கிறது.
விமானம் மும்பை விமான நிலையத்தை வந்தடைய, தனது உயிரைக் காப்பாற்றிய Dr விஷ்வராஜுக்கு அந்த நோயாளி மனதார நன்றி கூற, அவரை மேலதிக சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
Dr விஷ்வராஜைப் பொருத்தவரை, தன்னால் நடுவானில் மாரடைப்பு வந்து துடித்த ஒரு உயிரைக் காப்பாற்ற முடிந்தது என்பதைக் குறித்து மட்டுமல்ல, தான் ஒரு மருத்துவரானபின், ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக தான் உயிர் காக்கும் சிகிச்சையளிப்பதை தன் தாயார் நேரில் பார்த்ததால் தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக தெரிவித்துள்ளார் அவர்.