பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு விவகாரம்: அப்போதே எச்சரித்தும் கண்டுகொள்ளாத பிரதமர் ஜோன்சன்
பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாடானது மேலும் ஒரு வாரகாலம் நீடிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. தற்போதை நெருக்கடி நிலைக்கு முழு காரணம் போரிஸ் அரசாங்கம் மட்டுமே எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளதுடன், பெட்ரோல் பற்றாக்குறை முக்கிய தொழில்கள் மற்றும் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பல்பொருல் அங்காடிகளுக்கான சரக்குகளும் இதனால் தாமதமாகவும் அல்லது ரத்தாகவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதைய நிலை குறித்து தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்க முன்வராமல் இருப்பது வியக்கவைப்பதாக உள்ளது என்றார். இதனிடையே பெட்ரோல் விநியோகத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க ராணுவத்தை களமிறக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் தற்போது முனையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் தேவைக்கு அதிகமான எரிபொருள் உள்ளது, ஆனால் அதை பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல போதுமான திறமையான சாரதிகள் இல்லை என்றே கூறப்படுகிறது.
ஜூன் 23ம் திகதியே பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்களின் கோரிக்கையை போரிஸ் அரசாங்கம் நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உறுதியான முடிவெடுக்க தாமதித்ததாலையே, பிரி்த்தானியா தற்போது பெட்ரோல் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.