மூன்று நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா... இஸ்ரேல் - ஹமாஸ் நெருக்கடியை அடுத்து நடவடிக்கை
பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரகம், பிரேசில், கோஸ்டாரிகா மற்றும் ஜோர்டான் ஆகிய மூன்று நாடுகள் தொடர்பில் புதிதாக பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயண எச்சரிக்கை
பிரேசில், கோஸ்டாரிகா ஆகிய இரு அமெரிக்க நாடுகளில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாகவும், இஸ்ரேல் விவகாரம் ஜோர்டானிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி பிரித்தானிய பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
@getty
பிரேசிலின் முக்கிய நகரங்களில் குற்ற நடவடிக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம், தெருக்களில் பொலிசார் மிக அதிக அளவில் காணப்படலாம் எனவும், வங்கி கடன் அட்டை மோசடிகள் சாதாரணமாக காணப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான பயணங்கள் சிக்கலற்றவை என்றே குறிப்பிட்டுள்ளது. மேலும், தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
கோஸ்டாரிகா நாட்டிலும் திருட்டு சம்பவங்களும் குற்றச்செயல்களும் அதிகமாகவே காணப்படுவதாக எச்சரித்துள்ளனர். பேருந்து பயணங்களில் பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் பைகள் மற்றும் பெட்டியை விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இரவில் வெளிச்சம் குறைந்த அல்லது உள்ளூர் பகுதிகளில் தனியாக நடப்பதைத் தவிர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவசர நிலை பிரகடனம்
ஜோர்டானை பொருத்தமட்டில் 2021ல் மட்டும் சுமார் 26,000 பிரித்தானியர்கள் பயணம் செய்துள்ளனர். பெரும்பாலான பயணங்கள் சிக்கலற்றவை என்றே குறிப்பிட்டுள்ளது.
@getty
மேலும், சிரியாவுடனான ஜோர்டான் எல்லையில் இருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்ற அனைத்திற்கும் எதிராக வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மட்டுமின்றி, இஸ்ரேல் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச எல்லைகள் மிக விரைவில் மூடப்படவும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலில் இருந்து ஜோர்டானுக்குள் செல்லும் பாதைகள் அவசர அறிவிப்பில் மூடப்படலாம்.
மேலும், ஜோர்டானில் பாலஸ்தீன ஆதரவு அல்லது இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படலாம், தொடர்புடைய ஆர்ப்பாட்டங்களில் இருந்து பிரித்தானிய மக்கள் விலகி இருக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், ஜோர்டானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம். 2016 முதல் பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |