பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு: இவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்.. லண்டன் மேயர் உட்பட பல சங்கங்கள் வேண்டுகோள்..
பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு பிரச்சினைக்கு மத்தியில், சில பெட்ரோல் நிலையங்கள் வறண்டு போவதால் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் பெட்ரோல் முதலான பொருட்களைக் கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதனால் பெட்ரோல், உணவுப்பொருட்கள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பல பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை.
இந்த இக்கட்டான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால், அவை அனைத்தும் உடனடியாக நிலைமையை சீர்செய்யக்கூடியவை அல்ல. மக்கள் அனைத்து எரிபொருளில் நிலையங்களிலும் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போட்டு செல்கின்றனர். ஒரு சில நிலையங்களில் எரிபொருள் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மருத்துவ ஊழியர்களை போன்ற அத்தியாவசிய மற்றும் அவசர சேவை தொழிலாளர்கள் தங்கள் பணியை செய்யமுடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட காத்திருந்து பெட்ரோல் போடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், லண்டன் மேயர் சாதிக் கான், குறைந்தபட்சம் நியமிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் அத்தியாவசிய தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல், "சுகாதார மற்றும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு எரிபொருளுக்கான முன்னுரிமை அணுகல் வழங்கப்பட வேண்டும்" என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) தெரிவித்துள்ளது.
பிஎம்ஏ கவுன்சில் தலைவரான டாக்டர் சாந்த் நாக்பால், நோயாளிகளுக்கு கவனிப்பை உறுதி செய்ய சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில் "என்ஹெச்எஸ் ஊழியர்கள் தங்கள் வேலைகளைச் செய்ய முடியாத உண்மையான ஆபத்து உள்ளது" என கூறியுள்ளார்.
மேலும், ஆம்புலன்ஸ் குழுவினர், செவிலியர்கள், பராமரிப்பு பணியாளர்கள், கற்பித்தல் உதவியாளர்கள், காவல்துறை ஊழியர்கள் மற்றும் பிற முக்கிய தொழிலாளர்கள் எரிபொருளுக்காக மணிக்கணக்கில் வரிசையில் நிற்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோ கூடாது என்று கூறியதுடன், "முக்கிய ஊழியர்களின் ஒரே பயன்பாட்டிற்காக தனியாக எரிபொருள் நிலையங்களை நியமிக்க" வேண்டும் என யூனியன் யூனிசன் (Union Unison) அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதேபோல், சுகாதார மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் அல்லது நோயாளிகள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்று ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் கூறியது.
மேலும், காவல்துறை, ஆசிரியர்கள், உணவு தொடர்பான வாகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.