70 சிறுவர்களை தடுப்புக் காவலில் அடைத்த பிரித்தானியா
One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தேர்ந்தெடுத்தவர்களில் 70க்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள் என்றும், அவர்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
One in, one out திட்டம்...
பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
தடுப்புக் காவலில் 70 சிறுவர்கள்
அவ்வகையில் பிரான்சுக்கு திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தேர்ந்தெடுத்தவர்களில் 70க்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், அவர்கள் அனைவரும் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், பெரியர்கள் உடன் இல்லாமல் தனியாக புகலிடம் கோரி வரும் சிறுவர்களை தடுப்புக்காவலில் அடைப்பது சட்டவிரோதமாகும்.
Humans for Rights Network என்னும் மனித உரிமைகள் அமைப்பு, கடந்த செப்டம்பர் முதல், அவ்வகையில் 76 சிறுவர்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.
அந்த சிறுவர்களில் பலர் ஏற்கனவே சித்திரவதை, கடத்தல் ஆகிய விடயங்களால் பாதிக்கப்பட்வர்கள். அப்படியிருக்கும் நிலையில், அவர்கள் இப்படி தடுப்புக்காவலில் அடைக்கப்படுவதால் மனோரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த மேடி ஹாரிஸ் என்பவர்.
இந்நிலையில், அந்த 76 சிறுவர்களில் 26 பேர் தடுப்புக்காவலிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டு சிறார் காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
11 பேர் பெரியர்கள் என கண்டறியப்பட்டதால் பெரியவர்களுக்கான தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
13 பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்கள்.
அதாவது, சில மாதங்களுக்கு முன், பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரில் சிலர் தங்களை சிறார்கள் என அடையாளப்படுத்திக்கொள்ள, உண்மையில் அவர்கள் சிறார்கள் அல்ல, வயது வந்தவர்கள் என தெரியவந்தது.
ஆகவே, பிரான்சுக்கு அனுப்பப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், அந்த 76 பேரும் உண்மையாகவே சிறுவர்கள்தானா என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
அந்த காலகட்டத்தில்தான் அந்த 76 பேரும் தடுப்புக்காவல் மையங்களில் அடைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |