ஹார்முஸ் விவகாரம்: 40 நாடுகள் பங்கேற்கும் பிரித்தானியா தலைமையிலான கூட்டம்
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், உலகளவில் எரிசக்தி பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசு, 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இராணுவ திட்டமிடல் கூட்டத்தை நடத்துகிறது.
இந்த கூட்டம், செவ்வாய்கிழமை லண்டன் அருகே உள்ள Northwood military planning base-இல் நடைபெறுகிறது.
இதில், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, UAE போன்ற நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த நாடுகள், “ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கடற்பயணத்தை உறுதி செய்ய தயாராக உள்ளோம்” என கடந்த மாதம் வெளியிட்ட கூட்டு அறிக்கையைத் தொடர்ந்து, நடைமுறை நடவடிக்கைகளை ஆராய உள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், பிப்ரவரி இறுதியில் ஈரானை தாக்கியதன் பின்னர், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதனால், உலகின் 20 சதவீதம் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எரிசக்தி விலைகள் அதிகரித்து, உலகளாவிய பொருளாதார நெருக்கடி அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “இந்த நீரிணையை திறப்பது அமெரிக்காவின் பொறுப்பு அல்ல. NATO மற்றும் மேற்கத்திய கூட்டாளிகள் தாமே பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “பிரித்தானியா போன்ற நாடுகள் தங்களுக்குத் தேவையான எண்ணெயைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “போர் முடிந்த பிறகு மட்டுமே நடவடிக்கை தொடங்கும். ஆனால், மோதல் குறைந்தாலும், ஹார்முஸ் நீரிணை உடனடியாக திறக்கும் என்று கருத முடியாது. கப்பல் போக்குவரத்தில் முக்கிய சவால் காப்பீடு (insurance) அல்ல, பாதுகாப்பே” எனக் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#HormuzStrait #UKDefense #GlobalEnergy #MiddleEastConflict #Trump #KeirStarmer #OilCrisis