ஐபிஎல் ஒளிபரப்புக்காக இந்தியா வந்த பிரித்தானியர் ஹொட்டலில் சடலமாக மீட்பு
ஐபிஎல் ஒளிபரப்புக்காக இந்தியா வந்த பிரித்தானிய பொறியாளர் ஹொட்டலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பொறியாளர் மர்ம மரணம்
பிரித்தானியாவை சேர்ந்த ஒளிபரப்புத் பொறியாளரான 76 வயதான ஜான் வில்லியம் லாங்ஃபோர்ட் (Jan William Langford), ஐபிஎல் போட்டிகளின் உலகளாவிய ஒளிபரப்புக்குப் பொறுப்பான தொழில்நுட்பக் குழுவில் அங்கம் வகித்தார்.

கடந்த மார்ச் 24 ஆம் திகதி மும்பை வந்த அவர், வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை டிரைடென்ட் ஹோட்டலில் உள்ள அவரது அறைக்கு சென்றார்.
திங்கட்கிழமை காலை, வரவேற்பாளர் அவரது அறையில் உள்ள தொலைபேசிக்கு அழைத்த போது எந்த பதிலும் கிடைக்கவில்லை.
சிறுது நேரம் கழித்து அவரது அறைக்கு சென்று கதவை தட்டிய போதும் எந்த பதிலும் வரவில்லை. இதனையடுத்து சாவி மூலம் அறையை திறந்து பார்த்த போது, லாங்ஃபோர்ட் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக ஹொட்டல் நிர்வாகம் அவரை பம்பாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட பிரேத பரிசோதனையில், சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லாததால், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து மரைன் டிரைவ் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பிற்கான சரியான காரணத்தை கண்டறிய காவல்துறையினர் இறுதி மருத்துவ அறிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |