ஜேர்மனிக்கு மன்னர் சார்லஸ் சுற்றுப்பயணம்: 2ம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு மரியாதை
ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், இரண்டாம் உலகப் போரின் போது கூட்டணி நாடுகளின் குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
இரண்டாம் உலகப் போர்
கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945 ம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது போலந்து மற்றும் லண்டன் பகுதிகள் நாஜிகளின் விமான படைகளால் குறி வைக்கப்பட்டது.
இதன் விளைவாக பிரித்தானியாவின் கூட்டணி நாடுகள் ஜேர்மனியின் தொழிற்சாலைகளை குறி வைத்து சுமார் 1.9 மில்லியன் டன் வெடி குண்டுகளை வீசினர்.
Reuters
இதில் சுமார் 5,00,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர்.
மன்னர் சார்லஸ் மரியாதை
இந்நிலையில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஜேர்மனி சென்றுள்ள பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், இரண்டாம் உலகப் போரின் போது கூட்டணி நாடுகளின் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட பொதுமக்களின் ஹாம்பர்க்கின் செயின்ட் நிகோலாய் நினைவு சின்னத்திற்கு சென்று மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.
இருதரப்பு மற்றும் ஐரோப்பிய உறவுகளை வலுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மன்னராக சார்லஸ் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு பயணம் இதுவாகும்.
Reuters
இதற்கிடையில், கூட்டணி நாடுகளால் ஹாம்பர்க்கில் ஜூலையில் வீசப்பட்ட குண்டுவீச்சின் 80 ஆண்டு நினைவை ஒட்டி மன்னரின் மரியாதை நிகழ்வு அரங்கேறியுள்ளது.
”Operation Gomorrah” என்று அழைக்கப்படும் இந்த குண்டு வீச்சு தாக்குதலில் ஹாம்பர்க் நகரில் சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, கடந்த கால படிப்பினைகளை நினைவு கூறுவது நமது புனிதமான கடமையாகும், ஆனால் நமது பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பின் மூலம் மட்டுமே அதை முழுமையாக நிறைவேற்ற முடியும் என பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
Reuters