மர்ம பொருளை தெளித்து பிரித்தானியாவில் இருவர் மீது கொலை முயற்சி தாக்குதல்: பொலிஸார் விசாரணை
பிரித்தானியாவின் லண்டன் மற்றும் பர்மிங்காமில் இரண்டு பேரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 28 வயது இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இரட்டை கொலை முயற்சி
பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 20 ஆகிய திகதிகளில் பிரித்தானியாவின் பர்மிங்காமில் உள்ள ஈலிங், மேற்கு லண்டன் மற்றும் எட்ஜ்பாஸ்டன் ஆகிய இடங்களில் இரண்டு ஆண்கள் மீது சந்தேகத்திற்கிடமான திரவ பொருளை தெளித்து எரித்த சம்பவத்தில் முகமது அப்கர்(Mohammed Abbkr) என்ற 28 வயது இளைஞர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவரை வியாழக்கிழமை காலை கோவென்ட்ரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை (WMP) தெரிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவங்கள்
எட்ஜ்பாஸ்டனில் உள்ள ஷென்ஸ்டோன் சாலையில், மார்ச் 20 திகதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்குப் பிறகு டட்லி சாலை மசூதியிலிருந்து முகமது ரயாஸ்(70) திரும்பிச் சென்ற போது தாக்கப்பட்டார்.
இதில் அவரது கைகள் மற்றும் அவரது முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, அவரால் கண்களைத் திறக்கக் கூட முடியவில்லை.
பிப்ரவரியில், ஈலிங், சிங்கப்பூர் சாலையில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர் 82 வயது முதியவருடன் உரையாடத் தொடங்கினார்.
அப்போது திடீரென திரவம் ஒன்றை அவர் மீது ஊற்றி எரித்துள்ளார், இதையடுத்து அந்த 82 வயது முதியவர் முகம் மற்றும் கைகளில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொலிஸார் வேண்டுகோள்
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக WMP, CCTV, அல்லது பிற வீடியோ காட்சிகள் உள்ள நபர்கள் உடனடியாக பொலிஸாரிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.