பிரித்தானியாவை உலுக்கி வரும் எம்.பி கொலை! முதல் முறையாக குடும்பத்தினர் வேதனையுடன் வெளியிட்ட அறிக்கை
பிரித்தானியானியாவில் எம்.பி. சர் டேவிட் அமெஸ் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் முற்றிலும் உடைந்து போய்விட்டதாக வேதனையுடன் கூறியுள்ளனர்.
பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ், கடந்த வெள்ளிக் கிழமை தேவாலயத்தில் நடத்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது, அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்த அந்த நபரை பொலிசார் உடனே கைது செய்த நிலையில், அவன் பெயர் Ali Harbi Ali என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சோமாலியா வம்சாவளியை சேர்ந்த Ali Harbi Ali இஸ்லாமிய தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவன் என்பது தெரியவந்துள்ளது.
பொலிசார் விசாரிப்பதற்கு நீதிமன்றத்தை அனுகி அவகாசம் கேட்டுள்ளதால், அவனிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், எம்.பி சர் டேவிட் அமெஸ் குடும்பம், இந்த துயரத்திற்கு பிறகு முதல் முறையாக பேசியுள்ளனர்.
இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.பி மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் அளிக்கப்பட்ட ஆதரவு மிகவும் அதிகமாக உள்ளது. ஒரு குடும்பமாக, இது எங்களுக்கு பலத்தை அளித்துள்ளது.
டேவிட் மீது எவ்வளவு பேர் மதிப்பும், மரியாதையும், பாசமும் கொண்டிருந்துள்ளீர்கள் என்பதையும், அஞ்சலி செலுத்தியதில் நாங்கள் உணர்ந்தோம். இதனால் அவரை நினைக்கும் போது, மிகவும் பெருமையாக இருக்கிறது.
இருப்பினும் எங்கள் இதயங்கள் நொறுங்கிவிட்டது. அவர் இன்னும் நிறைய செய்ய விரும்பினார். இதை நாம் ஒரு முடிவாக பார்க்க கூடாது. அடுத்த அத்தியாயம் என்றே கூறுவோம்.
அவர் பணியாற்றிய பல தொண்டு நிறுவனங்களை ஆதரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Dame Vera Lynn நினைவுச்சின்னத்திற்கு நிதி திரட்டுவதற்கு டேவிட் பிரச்சாரம் செய்த நிலையில், அந்த பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு டேவிட்டின் குடும்பத்தினர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவர் நம் நாட்டின் வலிமை மற்றும் தைரியத்தை பிரதிபலித்தார். Southend-ஐ நகர அந்தஸ்தை பெறுவதற்கு அவர் செய்த பிரச்சாரத்தை சுட்டிக் காட்டிய குடும்பத்தினர், அவர் கடுமையாக உழைத்ததாக குறிப்பிட்டனர்.
மக்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரிடமும் கருணையையும் அன்பையும் காட்டும்படி நாங்கள் கேட்கிறோம்.
இது மட்டுமே முன்னோக்கி செல்லும் வழி. வெறுப்பை ஒதுக்கிவிட்டு ஒற்றுமையை நோக்கி வேலை செய்யுங்கள். ஒருவரின் இனம், மதம் அல்லது அரசியல் நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், சகிப்புத்தன்மையுடன் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஒரு குடும்பமாக, இந்த மோசமான விஷயம் ஏன் ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். அந்த வகையில் இனி ஒரு உயிர் போகக் கூடாது என கூறியுள்ளனர்.