பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம்
மத்திய கிழக்கு பகுதிக்கு பிரித்தானியா தனது அதிநவீன போர் கப்பலை அனுப்பி வைக்க ஆலோசித்து வருகிறது.
சைப்ரஸ் விமானப் படை தளம் மீது தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் நான்காவது நாளாக தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையில் சைப்ரஸில்(Cyprus) அமைந்துள்ள பிரித்தானியாவின் மிக முக்கியமான ராணுவ மையமான RAF அக்ரோட்டிரி(RAF Akritiri) பிரிட்டிஷ் விமானப்படை தளம் மீது ட்ரோன்கள் மூலம் திங்கட்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நடந்த இந்த ட்ரோன் தாக்குதலில் விமான ஓடுபாதை சிதைக்கப்பட்டது, இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று பிரித்தானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து விமானப் படை தளத்தின் பாதுகாப்பை அதிகரிக்க பிரித்தானிய அரசு, F-35 ரக மின்னல் போர் விமானங்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் மேம்பட்ட ரேடார் அமைப்புகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.
விரையும் அதிநவீன போர்க்கப்பல்
இந்நிலையில், சைப்ரஸ் விமானப் படை தளத்தில் பாதுகாக்க பிரித்தானிய அரசு போர்க்கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
வெளியான தகவல்களின் படி, ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தாக்கி அழிக்க “டைப் 45” ரக அழிப்பு கப்பலை மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்த பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்த போர் கப்பல்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்ககூடிய திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
HMS Duncan அல்லது HMS Dragon ஆகிய இரண்டு போர்க்கப்பல்களில் ஒன்றை அனுப்ப வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி ராணுவத் தளபதிகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறார்.
இருப்பினும் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |