பிரித்தானியாவில் கோவிட்-19 விதிகளை அகற்ற போரிஸ் ஜான்சன் திட்டம்!
பிரித்தானியாவில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், சுய-தனிமை போன்ற கோவிட்-19 விதிகளை அகற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.
'வைரஸுடன் வாழக் கற்றுக்கொள்வது' என்ற பிரித்தானிய அரசாங்கத்தின் நோக்கத்தின் கீழ், பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டாலும் இனி யாரும் சுய-தனிமை விதியைப் பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று ஸ்கை நியூஸில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் COVID-19 தொற்று எணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. சனிக்கிழமையன்று 81,713 பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 70,924 பாதிப்புகளே பதிவாகியுள்ளன.
The Telegraph-ல் வெளியான செய்தியின் படி, வரவிருக்கும் வாரங்களில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கான சுய-தனிமைப்படுத்தல், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மீதான கட்டுப்பாடுகளை அகற்ற திட்டமிட்டுள்ளதாவும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் முகக்கவசங்கள் அணிவதும் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், பிரித்தானிய அமைச்சர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் குடிமக்களுக்கு அன்றாட சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள், இருப்பினும் அபராதம் மற்றும் சட்டரீதியான அபராதங்கள் விதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும்கூறப்படுகிறது.
மேலும், பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் விடயங்களை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் தெளிவாக ஆர்வமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் கட்டாய COVID-19 PCR பரிசோதனையை ரத்து செய்வதாக உத்தியோகபூர்வ முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றாலும், இது குறித்த அறிவிப்பு வசந்த காலத்தில் வெளியிடப்படலாம் என்று ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
போரிஸ் ஜான்சன் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட பிளான் பி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளார், அதன்படி வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் மற்றும் இரவு விடுதிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அணுக தடுப்பூசி பாஸ்போர்ட் அல்லது எதிர்மறை சோதனை முடிவுகள் போன்றவைகள் தளர்த்தப்படும்.