பிரித்தானியாவில் 60 வயது முதியவரை இரத்தம் வர தாக்கிய பொலிஸார்! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
பிரித்தானியாவில் திருடன் என சந்தேகிக்கப்படும் 60 வயது நபரை பொலிஸார், இரத்தம் வரும் அளவிற்கு பொது இடத்தில் பயங்கரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் செவ்வாக்கிழமை மதியம் 3 மணியளவில், ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஸ்டீவனேஜ் சிட்டி சென்டரில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கிருக்கும் ஒரு கடையில் திருடியதாக நம்பப்படும் அந்த முதியவரை, கிட்டத்தட்ட 6 பொலிஸார் சேர்ந்து சுற்றி வளைத்தனர். அவரை கைது செய்வதற்காக அவர் மீது 2 முறை Taser Gun பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் அந்த மின்சார அதிர்ச்சியில் தாக்குபிடிக்க முடியாமல் அங்கேயே சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
அதன்பிறகும், பொலிஸார் ஒருவர், அவரை முதுகில் எட்டி உதைக்கிறார். இதனால் அவரது தலை தரையில் வேகமாக அடுத்து, நெற்றி மற்றும் முகத்தில் உடனடியாக இரத்தம் சொட்டுகிறது.
பிறகு அவர் கீழே நசுக்கப்பட்டு கைவிலங்கு பூட்டி கைது செய்யப்படுகிறார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் முன்னெச்சரிக்கையாக லிஸ்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு அவர் பலத்த காயமின்றி வெளியேற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஒரு பொலிஸ்அதிகாரி மீது தாக்குதல் மற்றும் கிரிமினல் சேதம் ஆகிய சந்தேகத்தின் பேரில் அந்த 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டு, தற்போது அவர் காவலில் இருக்கிறார்.
இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கே இருந்த ஒரு நபர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
மேலும், வயதான ஒரு நபரை பொலிஸார் கொடூரமாக தாக்கும் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.