ரஷ்யாவின் நட்பு நாடு மீது பேரிடியை இறக்கிய பிரித்தானியா: வெளிவரும் விரிவான பின்னணி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஆதரித்துவரும் பெலாரஸ் மீது மீண்டும் தடைகளை விதித்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
புதிய பொருளாதார தடைகளின் அடிப்படையில், இனி பெலாரஸில் இருந்து இரும்பு மற்றும் எஃகு இறக்குமதி முற்றாக ரத்து செய்யப்படும். மேலும், பிரித்தானியாவில் இருந்து பெலாரஸ் நாட்டுக்கு ஏற்றுமதியாகும் கலைப்பொருட்கள் தனித்துவம்மிக்க கைப்பைகள் என அனைத்தும் தடை செய்யப்படும்.
மட்டுமின்றி, நிறுவனங்களும் வர்த்தக ரீதியான தொடர்புகளை மேற்கொள்வதில் இருந்தும் விலக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை பெலாரஸ் ஆதரித்து வருகிறது.
மட்டுமின்றி தங்களது பிராந்தியத்தில் இருந்து தாக்குதலை முன்னெடுக்க அனுமதித்துள்ளதுடன், ரஷ்ய விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்தவும் அனுமதித்துள்ளது.
மேலும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆதரவு கருத்துகளையே பெலாரஸ் ஜனாதிபதியும் தொடர்ந்து கூறி வருகிறார். இதனாலையே, பெலாரஸ் மீது புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா அரசாங்கம் விதித்துள்ளது.
இதனிடையே, போர் தொடர்பான செலவீனங்களில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் ரஷ்யா, நாட்டின் செலவுகளை 24 பில்லியன் பவுண்டுகளுக்குள் குறைத்துக்கொள்ள திட்டம் வகுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்துக்கான நிதியை பெருமளவு குறைத்துக்கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது. பெலாரஸ் மீதான பொருளாதார தடைகளை அறிவித்துள்ள அதேவேளை, உக்ரைனை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்டத்தையும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இன்னும் 2,000 நகரங்கள் மற்றும் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனை மறுசீரமைத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான செலவு £620 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனின் மீட்சியானது சுதந்திர சக்தியின் சின்னமாக இருக்கும் எனவும், உக்ரைனை சின்னாபின்னமாக்கும் புடினின் முயற்சிகள் வலுவான, வளமான மற்றும் ஒன்றுபட்ட தேசத்தை மட்டுமே உருவாக்கும் என்பதை நிரூபிக்கும் என சூளுரைத்துள்ளார் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் டிரஸ்.