இனி இது தேவையில்லை.. பிரித்தானியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய விதிகள் அறிமுகம்!
பிரித்தானியாவின் சர்வதேச பயண விதிகள் எளிமையாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், அக்டோபர் 4ம் திகதி முதல் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பயணிகள், பயணத்துக்கு முன் சோதனை செய்து கொள்ள தேவையில்லை.
அக்டோபர் மாதத்திலிருந்து பிரித்தானியா வரும் பயணிகள், வருகைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு PCR சோதனையை எடுக்க வேண்டியதில்லை, அதற்கு பதிலாக, அவர்கள் விரைவான மற்றும் மலிவான lateral flow சோதனைகளை எடுக்கலாம் என ஷாப்ஸ் அறிவித்துள்ளார்.
கூடுதலாக, செப்டம்பர் 22ம் திகதி புதன்கிழமை காலை 4 மணி முதல், துருக்கி, பாகிஸ்தான், மாலத்தீவு, எகிப்து, இலங்கை, ஓமன், வங்க தேசம் மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் பிரித்தானியா சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் என அறிவித்தார்.
இதன் மூலம் இந்த நாடுகளிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகள் இனி ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை.
மேலும், அக்டோபர் 4ம் திகதி முதல் சர்வதேச பயணங்களுக்கு புதிய எளிமையான விதிகள் அறிமுகப்படுத்தப்படும்.
அதாவது, தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் பச்சை, அம்பர் மற்றும் சிவப்பு நாடுகள் பட்டியல் நடைமுறைக்கு பதிலாக சிவப்பு நாடுகள் பட்டியல் மட்டும் இருக்கும் என ஷாப்ஸ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருவதாக பயண ஏஜென்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.