இஸ்ரேலுக்கு உதவினால்... பிரித்தானியா உட்பட மூன்று நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்
மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேரடியாகவும் மறைமுகமாகவும்
ஈரான் மீது வியாழக்கிழமை திடீர் தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஜெருசலேம் மற்றும் தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல இலக்குகளை ஈரான் ஏவுகணைகளால் துளைத்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் போர் சூழல் அதிகரித்துள்ளது. இருப்பினும் நெருக்கடியான சூழலை தணிக்கும் வகையில் தூதரக ரீதியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும் நடவடிக்கைகளை கைவிட ஈரான் கோரியுள்ளது.
மேலும், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களைத் தடுப்பதில் பங்கேற்கும் எந்தவொரு நாடும், உடந்தையாக இருக்கும் அரசாங்கத்தின் அனைத்து பிராந்திய தளங்களையும் குறிவைத்து ஈரானியப் படைகள் தாக்குதலை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள மேற்கத்திய நாடுகளின் இராணுவ தளங்கள் மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகும் சூழல் உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பாலஸ்தீன மக்களை
இதனிடையே, பிராந்தியத்தில் அமைதி திரும்ப வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கோரியுள்ளார். ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பதிலடித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதும், ஈரானில் இருந்து முன்னெடுக்கப்படும் எந்தவொரு எதிர் தாக்குதல்களுக்கும் எதிராக இஸ்ரேலைப் பாதுகாக்க உதவுவதாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உட்பட பல மேற்கத்திய நாடுகள் தெரிவித்தன.
இதனையடுத்தே ஈரான் இந்த நாடுகள் மீது பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கடந்த அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் காஸாவில் 50,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது.
தற்போது ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்துள்ள இஸ்ரேலுக்கு இந்த நாடுகள் உதவ முன்வந்துள்ளது சமூக ஆர்லவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈரானிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், இஸ்ரேலிய எல்லைக்குள் விரைவில் 2,000 வெவ்வேறு ஏவுகணைகளை ஏவ ஈரானிய இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தளங்களும் குறிவைக்கப்படும் என்றார். முன்னதாக, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி தர முயன்றால், தாக்குதலின் உக்கிரம் அதிகரிக்கும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மிரட்டல் விடுத்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |