58 ஆண்டுகள் கழித்து Facebook உதவியால் தந்தையை கண்டுபிடித்த மகள்! பிரித்தானியாவில் நெகிழ்ச்சி சம்பவம்
பிரித்தானியாவில் 58 வருட இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்தின் லிங்கன்ஷையரைச் சேர்ந்த பெண் தன் தந்தையுடன் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலி லண்ட் (Julie Lund) எனும் 59 வயதாகும் அப்பெண், தான் வசிக்கும் பகுதியில் உள்ள சில Facebook குழுவில் தனது தந்தையை கண்டுபிடிக்க உதவி கேட்டார்.
அதன்படி, அந்த குழுக்களில் உள்ள ஃபேஸ்புக் பயனர்கள் உதவியுடன், அவரது தந்தை ஜூலி வசிக்கும் லிங்கன்ஷையரில் இருந்து வெறும் ஒரு மணிநேர பயண தூரத்தில் தங்கி இருப்பதை கண்டுபிடித்தார்.
பின்னர், அடுத்த ஒரு மணிநேரத்தில் மேற்கு யார்க்ஷயரின் டியூஸ்பரிக்கு (Dewsbury, West Yorkshire) பயணித்து, தனது ஒரு வயதில் இழந்த தனது தந்தை பிரையன் ரோத்தரியுடன் (Brian Rothery) அவர் மீண்டும் இணைந்தார்.
Image: Facebook/@Julie Lund
இருவரும் நெகிழ்ச்சியில் கண்கலங்கியபோது, "இது ஒரு அதிசயம் போல் இருந்தது, நான் அற்புதங்களில் நம்பிக்கை கொண்டவன் அல்ல," என்று பிரையன் ரோத்தரி கூற, அதற்கு பதிலளித்த ஜூலி, "நமக்கு நடந்தது அற்புதம் தான்" என்று கூறினார்.
Facebook என்பது மில்லியன் கணக்கான மக்களைக் கொண்ட உலகளாவிய இணையவழி சமூகமாகும், ஆனால் இந்த தளத்தில் உலகில் வெவ்வேறு மூலையில் எவரையும் ஒன்றிணைக்க உதவுகிறது.
இந்த சமூக ஊடக குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் இதுபோன்று நீண்டகாலமாக இழந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் கண்டறிந்து மீண்டும் ஒன்றிணைக்க மக்களுக்கு அடிக்கடி உதவுகின்றன.