பிரித்தானியாவில் கேளிக்கை விடுதியில் இருந்து நள்ளிரவில் மாயமான இளம்பெண் நிலை என்ன? முக்கிய தகவல்
பிரித்தானியாவில் நள்ளிரவில் காணாமல் போன இளம்பெண் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
விண்ட்ஸ்டரில் உள்ள இரவு கேளிக்கை விடுதிக்கு கடந்த ஞாயிறு அன்று சென்ற மர்னி கிளய்டன் என்ற 18 வயது இளம்பெண் நள்ளிரவு 2 மணிக்கு வெளியே வந்தார். ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை, இதையடுத்து அதே நாள் அதிகாலை 3 மணிக்கு மர்னியை காணவில்லை என அவர் குடும்பத்தார் பொலிசில் புகார் கொடுத்தனர்.
காணாமல் போன போது மர்னி சாம்பல் நிற உடையை அணிந்திருந்தார். அவரின் புகைப்படங்களையும் பொலிசார் வெளியிட்டனர். காணாமல் போன அன்று எடுத்த புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிசார் கூறுகையில், நாங்கள் மர்னியின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அவர் எங்கிருக்கிறார் என்று தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மர்னி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர். அவர் பத்திரமாக உள்ளார், இந்த நிலையில் கொலை மிரட்டல் விடுத்தல், உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்துதல் மற்றும் பொலிஸ் பிணையை மீறியமை போன்ற சந்தேகத்தின் பேரில் 21 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.