ரஷ்ய போர் தாக்குதலில் சிக்கியுள்ள உக்ரைன் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! 17 பேர் உயிரிழப்பு... கடும் துயரம்
உக்ரைனில் நடந்த சாலை விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்கு உக்ரைன் ரிவ்னேவில் நேற்று எரிபொருள் ஏற்றி சென்ற லொறி மீது பயணிகள் பேருந்து மற்றும் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் விபத்தில் மக்கள் உயிரிழந்துள்ளதால் அந்நாடு மேலும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அந்நாட்டு மக்களுக்கு நேற்று நடத்திய தினசரி உரையில், மேற்கு ரிவ்னே பிராந்தியத்தில் பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த விபத்தில் ஒரு பேருந்து, ஒரு கார் மற்றும் எரிபொருள் லொறி மோதிக்கொண்டன. இதில், தற்போதைய நிலவரப்படி 17 பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரலாம்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்று அவர் தெரிவித்தார். இந்த விபத்து உக்ரைனுக்கு எதிரான ரஷிய போருடன் நேரடி தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும் ஜெலன்ஸ்கி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை அவர் தெரிவித்துள்ளார்.