உக்ரைன் மருத்துவமனை தாக்குதலில் குழந்தை உட்பட 3 பேர் மரணம்
உக்ரைனில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் ரஷ்யா குண்டுவீசித் தாக்கியதில் 6 வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனில் இன்று போர் நிறுத்தம் அமுலில் இருந்த நிலையிலும், தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய படை தாக்குதல் நடத்தியதால் விளாடிமிர் புடின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது.
இத்தாக்குதலில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவர்கள் உட்பட 17 பேர் காயமடைந்ததாக மரியுபோல் நகர சபை தெரிவித்திருந்தது. உயிரிழப்புகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதுப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, 6 வயது சிறுமியும் மேலும் இருவர் உயிரிழந்தனர்.
மரியுபோல் நகர சபை ஒரு டெலிகிராம் அறிக்கையில் "இன்றுவரை, ரஷ்ய விமானத்தால் மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது பயங்கரவாத குண்டுவீச்சுக்குப் பிறகு, சுமார் 17 பேர் (குழந்தைகள், பெண்கள், மருத்துவர்கள்) காயமடைந்தனர், மூன்று பேர் இறந்தனர், அவர்களில் பெண் குழந்தையும் ஒருவர்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை கட்டிடம் 'பல முறை' பயங்கரமான ரஷ்ய குண்டுகளால் தாக்கப்பட்டது, அவற்றில் ஒரு குண்டு மருத்துவமனைக்கு மிக அருகில் விழுந்து இரண்டு மாடி ஆழத்தில் ஒரு பள்ளத்தை விட்டுச் சென்றது.
மருத்துவமனை மீதான இந்த நேரடி தாக்குதல் 'உக்ரேனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான இறுதி ஆதாரம்' என்று ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி விவரித்தார்.