உலக மக்களை பட்டினியிட முடிவு செய்திருக்கும் புடின்: பகீர் கிளப்பும் குற்றச்சாட்டு
வளரும் நாடுகளில் பஞ்சம் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வரும் சூழலில் உலகின் உணவு விநியோகத்தை ரஷ்யா தடுத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடைகள் ரத்தாகும் வரையில் தங்கள் நாடு உணவு தானியங்களை விடுவிக்காது என்றே முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 85 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் பொருளாதார ரீதியாகவும் உள்கட்டமைப்பிலும் பேரிழப்பை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்கள் மீதான அதன் முற்றுகையை ரஷ்யா நீக்கி, உலகம் முழுவதும் உணவு மற்றும் உரங்களின் விநியோகத்தை செயல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கோரியுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பால் சாதிக்க முடியாததை உணவு தானியங்களை ஆயுதமாக பயன்படுத்தி ரஷ்யா சாதிக்க முயற்சி செய்வதாகவும் அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கான உணவு விநியோகம் ரஷ்ய இராணுவத்தால் உண்மையில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார் பிளிங்கன்.
ரஷ்யாவும் உக்ரைனும் உலகளாவிய கோதுமை விநியோகத்தில் 30% மற்றும் உலகின் சூரியகாந்தி எண்ணெயில் 69% உற்பத்தி செய்கின்றன.
இதனிடையே, ரஷ்யாவின் படையெடுப்பிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைனின் தானிய ஏற்றுமதி 5 மில்லியன் டன்னிலிருந்து மார்ச் மாதத்தில் 200,000 டன்னாகவும், ஏப்ரலில் சுமார் 1.1 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.