உணவு பண்டங்களின் விலை கடுமையாக உயரலாம்... தானிய கிடங்குகள், விவசாய நிலங்கள் சேதம்
தெற்கு உக்ரைனில் அணை சேதமடைந்து பெரும்பகுதி பெருவெள்ளத்தில் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது உணவு பண்டங்கலின் விலை கடுமையாக உயர வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தானியங்கள் அனுப்புவதில் சிக்கல்
உக்ரைனில் தானிய கிடங்குகள் பல வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் மேற்கு பகுதிக்கு தானியங்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டின் அறுவடை தற்போது அச்சுறுத்தலில் உள்ளதாக உக்ரைன் வேளாண் மக்களும் எச்சரித்துள்ளனர்.
@AP
விவசாயத்திற்காக பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த நோவா ககோவ்கா அணை சேதப்படுத்தப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதுமை, சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் உக்ரைன் நாடும் ஒன்று.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய நாளில் இருந்து உணவுப் பொருட்களின் மொத்த விலையில் கடும் உயர்வு ஏற்பட்டது. இதுவே, பிரித்தானியாவில் உணவு பண்டங்களின் விலை உயர்வுக்கும், எகிப்து போன்ற குறிப்பிட்ட நாடுகளில் உணவு பற்றாக்குறைக்கும் முதன்மை காரணமாக அமைந்தது.
உணவு தானியங்களின் நெருக்கடி
ககோவ்கா நீர்த்தேக்கத்தில் இருந்து தான் 1.4 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்ததாக உக்ரைனின் விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு 1.19 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
Credit: Cover Images
தண்ணீர் பற்றாக்குறையால் தெற்கு உக்ரைனில் உள்ள விவசாய நிலங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாலைவனங்களாக மாறும் எனவும் விவசாய அமைச்சகம் அச்சம் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைனில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழல், உலக நாடுகளில் உணவு தானியங்களின் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றே கூறப்படுகிறது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் மக்களுக்கு இது ஒரு பேரிடியாக மாறும் என்றே அஞ்சப்படுகிறது.