உக்ரைன் தானியங்களை திருடி விற்று அந்நியச் செலவாணியை அதிகரிக்கும் ரஷ்யா!
உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாடு பகுதியில் உள்ள தானிய சேமிப்பு கிடங்குகளை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு ரஷ்யா விற்றுவருவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைனின் குறித்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. ரஷ்ய துருப்புகளால் முடக்கப்பட்ட துறைமுகங்கள் மூலம் மில்லியன் கணக்கான டன் தானியங்களை உக்ரைன் ஏற்றுமதி செய்ய முடியாததால் உலகளாவிய உணவு நெருக்கடியின் அச்சத்தின் மத்தியில் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உக்ரைனின் முக்கியமான இரு துறைமுகங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளன. அதன் சுற்றுவட்டாரங்களில் அமைக்கப்பட்டிருந்த தானிய சேமிப்பு கிடங்குகளும் தற்போது ரஷ்யா வசமாகியுள்ளன.
இந்த நிலையில், தங்களின் தானிய கிடங்குகளில் இருந்து பல மில்லியன் டன் தானியங்களை கொள்ளையிட்டு, ரஷ்யா இரகசியமாக வெளிநாடுகளுக்கு விற்று தங்கள் அந்நியச் செலவாணியை பெருக்கி வருவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
பல கிடங்குகளின் உரிமையாளர்களே ரஷ்யாவின் கொள்ளை தொடர்பில் புகார் அளித்துள்ளதாகவும், இது அப்பட்டமான கொள்ளை எனவும், ரஷ்யா கைப்பற்றியதாக கூறும் பகுதிகளில் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்வதாகவும் உக்ரைன் வேளாண் அமைச்சர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே தெரிவித்து வருகிறார்.
இதனிடையே, அமெரிக்கா தரப்பில் இருந்து ஆப்பிரிக்க நாடுகள் உட்பட மொத்த 14 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில் ரஷ்யாவில் இருந்து தானியங்களுடன் ஏதேனும் சரக்கு கப்பல் தென்பட்டால் அது திருடப்பட்ட உக்ரைன் தானியங்கள் என குறிப்பிட்டிருந்தது.
மேலும், கிரிமியா பகுதி ஊடாக கொள்ளையிட்ட தானியங்களை ரஷ்யா துருக்கிக்கு விற்றதாக உக்ரைன் தூதுவர் குற்றஞ்சாட்டியிருந்தார். ரஷ்யா வெட்கமின்றி உக்ரேனிய தானியங்களைத் திருடி கிரிமியாவிலிருந்து வெளியேற்றுகிறது.
இந்த தானியங்கள் துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன என்று அங்காராவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பில் துருக்கி நிர்வாகத்திடம் விவாதித்துள்ளதாகவும், குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்க துருக்கி ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஷ்ய தரப்பில் இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டே வருகிறது. மேலும், துறைமுகங்களில் இருந்து தானியங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றால், உக்ரைன் ஜனாதிபதியின் உத்தரவு வேண்டும், அவர்களின் சட்டம் அது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவும் உக்ரைனும் உலக கோதுமை விநியோகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. ஆனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததில் இருந்து உக்ரேனிய தானிய ஏற்றுமதி அதன் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் உக்ரைனில் சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் சிக்கியுள்ளது. மட்டுமின்றி, போருக்கு பின்னர் இதுவரை 1.2 மில்லியன் டன் தானியங்கள் மட்டுமே உக்ரைனால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.