உக்ரைனின் மிகப்பெரிய கோடீஸ்வரரை மனைவியுடன் படுகொலை செய்த ரஷ்யா
உக்ரைனின் மிகப்பெரிய தொழிலதிபர் தமது மனைவியுடன் ரஷ்ய தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் தெற்கு நகரமான மைகோலைவில் குறித்த கோர சம்பவம் நடந்துள்ளது. 74 வயதான Oleksiy Vadatursky, மற்றும் அவரது மனைவி Raisa ஆகியோர் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இரவோடு இரவாக கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச நாடுகளுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்துவரும் நிறுவனம் ஒன்றை Vadatursky நடத்தி வருகிறார். மட்டுமின்றி, உக்ரைனின் ஹீரோ என்ற பட்டத்தையும் பெற்றவர் Vadatursky.
சமீப நாட்களில் முன்னெடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல் சம்பவம் அது என குறிப்பிட்டுள்ளார் நகர மேயரான Oleksandr Senkevych. பிரபலமான ஹொட்டல் ஒன்றும், விளையாட்டு அரங்கம், இரண்டு பாடசாலைகள், பொதுமக்களுக்கான சேவை மையம், மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் பல என ரஷ்யா ஏவுகணை தாக்குதலுக்கு சேதமாகியுள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கருங்கடல் பகுதியில் உக்ரைனின் மிகப்பெரிய துறைமுக நகரமான ஒடேசாவுக்கு செல்லும் முக்கிய பாதையாகும் மைகோலைவ் நகரம். இதனாலையே உக்ரைன் மீதான படையெடுப்பை முன்னெடுத்த பிப்ரவரி 24ம் திகதி முதல் தொடர் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது மைகோலைவ் நகரம்.
இப்பகுதில் கோலோச்சி வந்தவர், கொல்லப்பட்ட Oleksiy Vadatursky. வேளாண், கப்பல் கட்டுமானம் மற்றுமின்றி மைகோலைவ் நகர வளர்ச்சிக்கும் அவர் அளித்துள்ள பங்கு மிகப்பெரியது என குறிப்பிட்டுள்ளார் உள்ளூர் அரசியல்வாதியான Vitaliy Kim.
இதனிடையே, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டால், ரஷ்யா திட்டமிட்டே Oleksiy Vadatursky குடியிருப்பின் மீது தாக்குதல் தொடுத்திருக்கலாம் என அஞ்சுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அவரது படுக்கையறையில் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது, ரஷ்யாவின் திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.