துறைமுகத்தில் சிக்கியிருக்கும் உணவு தானியங்களை வெளியே கொண்டு வர உக்ரைன் துவங்கியுள்ள முயற்சி
ஐக்கிய நாடுகள் ஆதரவுடன், உக்ரைனில் சிக்கியிருக்கும் உணவு தானியங்களை கருங்கடல் வழியாக வெளியே கொண்டுவருவதற்கு, சர்வதேச கூட்டாளிகளின் உதவியுடன் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது உக்ரைன்.
இந்த தகவலை உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Oleg Nikolenko இன்று வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைனுடைய பெரிய கடல்துறைமுகங்கள் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளது. ஆகவே, கருங்கடலில் போக்குவரத்தை ரஷ்ய கடற்படை கட்டுப்படுத்திவருகிறது. இதனால், உக்ரைனிலிருந்து தானியங்களை வெளியே கொண்டுவர முடியாததால், உலக நாடுகள் பலவற்றில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
ஆகவே, ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவல் காரணமாக எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் உணவுப் பிரச்சினை ஏற்படுமோ, அந்த நாடுகள் அனைத்தும், ரஷ்யாவைத் தொடர்பு கொண்டு, உக்ரைன் துறைமுகங்களில் ரஷ்யா ஏற்படுத்தி வைத்துள்ள தடைகளை விலக்குமாறும், போரை முடிவுக்குக் கொண்டு வருமாறும் அதற்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Oleg Nikolenko தெரிவித்துள்ளார்.