தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த உக்ரேனியர்! போலந்தில் பரபரப்பு சம்பவம்
போலந்தில் உள்ள தூதரகத்திற்கு வெளியே உக்ரேனியர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த உக்ரேனியர்
தெற்கு போலந்தில் உள்ள உக்ரைனின் துணைத் தூதரகத்திற்கு வெளியே உக்ரைனைச் சேர்ந்த நபர் ஒருவர் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் க்ராகோவ் நகரில் (Krakow) உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு (0600 GMT) முன்பு நடந்ததாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த நபருக்கு 63 வயது என்று கூறப்படுகிறது.
Representative Image
பொலிஸ் செய்தித்தொடர்பாளர் கூறியது என்ன?
அவர் "உக்ரேனிய தூதரகத்திற்கு வெளியே வரிசையில் நின்று கொண்டிருந்தார்... அவர் உக்ரேனிய மொழியில் ஏதோ கத்தத் தொடங்கினார், எரியக்கூடிய பொருள் கொண்ட ஒரு பாட்டிலை எடுத்து, அதனை தனக்குத்தானே ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்" என்று க்ராகோவ் நகர காவல்துறை செய்தித்தொடர்பாளர் கூறினார்.
"ரோந்து பணியில் இருந்த ஒரு அதிகாரி மற்றும் சம்பவ இடத்தில் இருந்த மற்றோரு நபரும் தீயை அணைத்தனர். அந்த நபர் தீவிரமான, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்" என்று அவர் மேலும் கூறினார்.
அந்த நபர் என்ன சொல்லி கத்தினார் என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
என்ன சொல்லி கத்தினார்?
கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது நாட்டை ஆக்கிரமித்த ரஷ்யாவை எதிர்த்துப் போரிடவும், உக்ரைனுக்குத் திரும்பிச் செல்லவும் அந்த நபர் தனது சக குடிமக்களை வற்புறுத்தியதாக, முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், Polsat News தொலைக்காட்சி சேனலில் பேசிய ஒருவர், "அவர் போரையோ அல்லது உக்ரைனையோ குறிப்பிடவில்லை - அவருடைய தனிப்பட்ட குறைகளை மட்டுமே கூறினார்" என்ற தெரிவித்துள்ளார்.
துணைத் தூதரகத்தில் தனக்கு ஒரு பிரச்சனை இருப்பதாகவும், தனக்கு உதவி செய்யப்படவில்லை என்றும் அவர் கத்தியதாக, அந்த நபர் கூறினார்.