ரஷ்யர்களின் சித்திரவதை... பிரித்தானிய இளவரசரின் தொலைபேசி அழைப்பு: சிலிர்க்கும் உக்ரைன் பெண் வீரர்
மூன்று மாத கால ரஷ்ய சிறையில் சித்திரவதைக்கு பின்னர் இளவரசர் ஹரி அளித்த ஊக்கத்தால் மீண்டும் நாட்டுக்காக போரிட முடிவு செய்துள்ளதாக உக்ரைன் பெண் இராணுவ வீரர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் மருத்துவ குழுவில் தன்னார்வலராக இணைந்து கொண்டவர் 53 வயதான Yulia Paievska. இந்த நிலையில், மார்ச் மாதம் மரியுபோலில் உள்ள திரையரங்கில் வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கச் சென்றிருந்த போது ரஷ்ய வீரர்களால் கடத்தப்பட்டார்.
மூன்று மாத காலம் மிகக் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் அழிந்துவிட்டது என தம்மை அச்சுறுத்தியதாகவும் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இனி போர்க்களத்தில் களமிறங்குவதாக இல்லை என முடிவு செய்து, குடும்பத்துடன் எஞ்சிய நாட்களை செலவிட திட்டமிட்ட ஒருநாள், பிரித்தானிய இளவரசர் ஹரி தொடர்பு கொள்ள வேண்டும் என விரும்புவதாக தொலைபேசி அழைப்பு வந்தது என தெரிவித்துள்ளார் பைவ்ஸ்கா.
தொடர்ந்து, அழைப்பில் வந்த இளவரசர் ஹரி உக்ரைனில் நடந்த போர் குறித்து வலுவாகவும் உண்மையாகவும் பேசியதாக பைவ்ஸ்கா தெரிவித்துள்ளார். மேலும், போர்க்களத்தில் உங்கள் உதவி தேவைப்படும் எனவும், நாட்டுக்காக நாம் செய்யும் சிறு உதவிக்கும் பலன் உண்டு என அவர் உத்வேகம் அளித்ததாகவும் பைவ்ஸ்கா குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைன் நாட்டின் துணிச்சலை பாராட்டுவதாகவும், தமது ஆதரவு எப்போதும் உக்ரைன் மக்களுக்கு உண்டு எனவும் ஹரி குறிப்பிட்டதாக பைவ்ஸ்கா தெரிவித்துள்ளார். இதன் பின்னரே, உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தும் , போர்க்களத்தில் மீண்டும் களமிறங்க முடிவு செய்ததாகவும் பைவ்ஸ்கா தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கிய பின்னர் சுமார் 500 உக்ரைன் வீரர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளதுடன், சுமார் 8000 வீரர்களுக்கு அடிப்படை மருத்துவ உதவி அளிக்க பயிற்சியும் அளித்துள்ளார்.
மார்ச் 16ம் திகதி ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ரஷ்யாவால் தாக்குதலுக்கு உள்ளானார். தொடர்ந்து கடத்தப்பட்டு, நாளுக்கு அரை கோப்பை தண்ணீர் மட்டுமே குடிக்கக் கொடுத்துள்ளனர். மட்டுமின்றி, அவரது தைராய்டு மற்றும் ஆஸ்துமா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.