ராணுவ வீரர்கள் இழப்பை முதல்முறையாக அறிவித்துள்ள ரஷ்யா: தாக்குதலை மேலும் கடுமையாக்க உத்தரவு
உக்ரைன் மீது ரஷ்யா தனது போரை தொடங்கியதில் இருந்து இதுவரை 498 ராணுவ வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே எட்டாவது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனை ரஷ்யா பலமுனைகளில் இருந்தும் சுற்றிவளைத்து பயங்கரமாக தாக்கி வருகிறது.
ரஷ்யாவின் நேற்றைய தாக்குதலின் போது உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்வின் காவல்நிலையம், மருத்துவமனை போன்றவை கடுமையான பாதிப்புக்கு உள்ளான நிலையில், கார்க்கிவ்வில் இன்றும் உள்ளுர் அரசு அலுவலங்கள் மீது பயங்கரமான ஏவுகணை தாக்குதல் தொடர்கிறது.
மேலும் ரஷ்ய படைகள் அசோவ் கடலில் உள்ள மூலோபாய துறைமுகமான மரியுபோலைச் சுற்றி வளைத்து உக்ரைனின் தலைநகர் கீவ்வின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை கடுமையாக தாக்கிவருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.
இந்தநிலையில், உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்தே இதுவரை ரஷ்ய ராணுவ துருப்புகளின் இழப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் ரஷ்யா வெளியிடாமல் அமைதி காத்துவந்த நிலையில், உக்ரைன் நாட்டின் அறிவிப்புகளின் அடிப்படையில் சுமார் 5000 வீரர்களை ரஷ்ய இழந்து இருப்பதாகவும், பல்வேறு ராணுவ ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, தற்போது ரஷ்ய தனது ராணுவ வீரர்களின் இழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், உக்ரைன் மீதான போரில் இதுவரை 498 ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த போரில் ரஷ்யா இழந்துள்ள ராணுவ வாகனங்கள், போர் ஆயுதங்கள், போர்விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவை பற்றிய தகவல்களை இன்னும் ரஷ்யா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.