துல்லியமான ட்ரோன் தாக்குதல்... ரஷ்யாவின் 12 உளவுத்துறை அதிகாரிகளை பழி தீர்த்த உக்ரைன்
உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் அமைந்திருந்த ஒரு இரகசிய கட்டளைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட துல்லியமான ட்ரோன் தாக்குதல் மூலம் 12 உளவுத்துறை அதிகாரிகளை கொத்தாக அழித்ததாக உக்ரைன் தகவல் வெளியிட்டுள்ளது.
துல்லியத் தாக்குதல்
டொனெட்ஸ்க் பகுதியில், ட்ரோன்களால் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலில் ரஷ்யாவின் FSB அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் என அஞ்சப்படும் 12 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இரகசியமாக மிகுந்த கவனத்துடன் குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலில், மேலும் 15 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் முதன்மை ட்ரோன் தளபதியான ராபர்ட் ப்ரோவ்டி தெரிவிக்கையில், புதன்கிழமையன்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலுக்கு எட்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
ரஷ்யாவின் FSB-யைச் சேர்ந்த ஒரு கட்டளை மையத்தையும், ஒரு சிறப்புச் செயல்பாட்டுப் பிரிவையும் அந்தத் தாக்குதல் அழித்துவிட்டதாக ப்ரோவ்டி தெரிவித்தார்.
மேலும், அந்தப் பிரிவு, உக்ரைன் எல்லைக்குள்ளேயே உளவு எதிர்ப்பு நடவடிக்கைகள், நாசவேலைத் தாக்குதல்கள் மற்றும் ரஷ்ய ஆதரவுப் போராளிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருந்ததாக அவர் கூறினார்.

போரின் மிக முக்கியமான ஒரு தருணத்தில், இந்தத் தாக்குதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; ரஷ்யா முன்னெடுத்து வரும் இந்தத் தீவிரமான தாக்குதல் நடவடிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாகத் தேக்கமடைந்து வருவதாகப் புதிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வலுவான நிலையில்
வெளியான தரவுகளின் அடிப்படையில், மார்ச் மாதத்திலிருந்து ரஷ்யப் படைகளால் எந்தவொரு நிலப்பரப்பு ஆதாயத்தையும் ஈட்ட முடியவில்லை; சொல்லப்போனால், இம்மாதத்தின் தொடக்கத்திலிருந்து அவை ஏறத்தாழ 23.2 சதுர மைல் நிலப்பரப்பை இழந்துள்ளன.
பெரும்பாலும் ட்ரோன் பயன்பாட்டின் மூலம், அதே காலகட்டத்தில் ரஷ்யப் படைகளுக்கு 55,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் கூறுகிறது.

மட்டுமின்றி, ட்ரோன் போரில் அதிகரித்து வரும் மேன்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக, கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்குத் தாங்கள் தற்போது போர்க்களத்தில் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் நம்புகின்றனர்.
உக்ரைனுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில், ஹங்கேரி தனது நீண்டகால வீட்டோ அதிகாரத்தை விலக்கிக்கொண்டதைத் தொடர்ந்து, 105 பில்லியன் டொலர் மதிப்பிலான கடன் தொகுப்பை விடுவிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நிதி, உக்ரைனின் நலிவடைந்த பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கவும், ஆயுத உற்பத்திக்கு நிதியளிக்கவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |