ரஷ்ய இராணுவத்திடம் சிக்கி சித்திரவதைக்குள்ளான உக்ரைனிய வீரர்: முதல் முறையாக மௌன கலைப்பு...
ரஷ்ய இராணுவத்திடம் சிக்கி, சித்திரவதைக்குள்ளாகி, எலும்பும் தோலுமாக மாறிய உக்ரைன் வீரர் ஒருவர் தற்போது முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
தாங்கள் எப்படி ரஷ்ய இராணுவத்தினரின் கையால் விலங்குகளைப் போல நடத்தப்பட்டோம் என்பதை விவரித்துள்ளார் Mikhailo Dianov.
ரஷ்ய இராணுவத்திடம் சிக்கி, சித்திரவதைக்குள்ளாகி, எலும்பும் தோலுமாக மாறிய உக்ரைன் வீரர் ஒருவரைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகத்தையே உலுக்கியது.
Mikhailo Dianov என்னும் அந்த வீரர், தற்போது முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
image - news.sky
ரஷ்யா சமீபத்தில் 215 உக்ரைன் போர்க்கைதிகளை விடுவித்தது. அவர்களில் ஒருவரான Mikhailo Dianov, ரஷ்ய இராணுவத்திடம் சிக்கும் முன்னும், நான்கு மாதங்கள் ரஷ்ய இராணுவத்தால் சித்திரவதை அனுபவித்தபின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
வாட்டசாட்டமாக போருக்குப் புறப்பட்டுப்போன Mikhailo Dianov, நான்கு மாத சித்திரவதைக்குப் பின், உடல் முழுவதும் காயங்கள், வளைந்த கை எலும்பு முதலான பல்வேறு பிரச்சினைகளுடன், மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார்.
image - news.sky
ஊடகவியலாளர் ஒருவர் அவரை சந்தித்தபோது, தாங்கள் எவ்வாறு ரஷ்ய இராணுவத்தினரால் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, மின்சார ஷாக் கொடுத்துத் தாக்கப்பட்டு விலங்குகளைப் போல நடத்தப்பட்டோம் என்பதை விவரித்துள்ளார் Mikhailo Dianov.
நான்கே மாதங்களில் 40 கிலோ எடை குறைந்து, ஆளே அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டிருக்கும் Mikhailo Dianov, தாங்கள் ரஷ்ய இராணுவத்தின் பிடியில் இருந்தபோது, தங்களுக்கு சாப்பிடுவதற்கு வெறும் 30 விநாடிகளே கொடுக்கப்படும் என்று கூரியுள்ளார்.
30 விநாடிகளுக்குள் உங்களால் எவ்வளவு சாப்பிடமுடியுமோ அவ்வளவையும் சாப்பிடவேண்டும், 30 விநாடிகளில் அது சாத்தியமேயில்லை என்கிறார். கடினமாக இருக்கும் அந்த ரொட்டியைக் கடித்து சிலருக்கு பல் கூட உடைந்துவிட்டதாம்.
image - news.sky
அந்த கடினமான ரொட்டியைக் கடித்துவிட்டு, உடனே ஓடவேண்டுமாம். பசியில், கீழே கிடந்த பழம் ஒன்றை எடுத்துச் சாப்பிட்டவர்களை தனிமைச் சிறையிலடைத்து, கட்டையால் அடித்தும், மின்சார ஷாக் கொடுத்தும், நகத்தின் கீழ் ஊசி இறக்கியும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள் ரஷ்யர்கள்.
அதற்கு மேல் Mikhailo Dianov விவரிக்கும் கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவற்றைக் கேட்டால் பலவீன இதயம் உடையோர் பாதிக்கப்படக்கூடும்.
மரியூபோலில் உள்ள ஸ்டீல் ஆலையில் தங்கி, தன் நாட்டுக்காக போராடிய Mikhailo Dianov ரஷ்யப் படைவீரர்களிடம் சிக்கியபோது எல்லாம் முடிந்தது என்றே நினைத்தாராம் அவர்.
image - news.sky
ஆனால், சமீபத்தில் ரஷ்ய போர்க்கைதிகளுக்கு பதிலாக, உக்ரைன் போர்க்கைதிகளை ரஷ்யா விடுவித்தபோது, Mikhailo Dianovம் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டுமானால், குறிப்பாக, வளைந்து போயிருக்கும் அவரது கையை சரிசெய்வதற்காக சிகிச்சை செய்யவேண்டுமானால், அந்த சிகிச்சையை அவரது உடல் தாங்கவேண்டும். அதற்கே அவர் இன்னும் 20 கிலோ எடை அதிகரிக்கவேண்டுமாம்.
இப்போதும் போர்க்குற்றங்கள் செய்யவில்லை என்றே மறுத்துவருகிறது ரஷ்யா. கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா என்ன?
Mikhailo Dianovவைப் பார்த்தாலே, ரஷ்யா போர்க்கைதிகளை எப்படி நடத்துகிறது என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்துவிடும்!