பேச்சுவார்த்தை ஒருபக்கம்... ஏவுகணை தாக்குதல் மறுபக்கம்: அடங்காத ரஷ்யா
உக்ரைனில் ஐ.நா பொதுச்செயலாளரின் விஜயத்தின் போது கீவ் நகரம் மீது ரஷ்யா புதிய ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளாடிமிர் புடினின் படைகள் உக்ரைனின் தலைநகரை கைப்பற்ற தவறிய நிலையில், கடும் விமர்சனங்களுக்கு பின்னர் தலைநகரில் இருந்து பின்வாங்கியதை அடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய Shevchenko மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது. இதில் 10 பேர்கள் காயம்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை அடுத்து, அந்த குடியிருப்பு வளாகம் தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், 25 தளங்கள் கொண்ட குடியிருப்பு வளாகமானது சரிபாதி சேதமடைந்துள்ளது என உக்ரைன் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதில், ஐவர் காயங்களின்றி மீட்கப்பட்டுள்ளதாகவும் 10 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது. இதனிடையே, 5 ரஷ்ய ஏவுகணைகள் நகரில் பாய்ந்து தாக்கியுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் Antonio Guterres உடனான சந்திப்பு நடந்த பின்னர் சுமார் ஒருமணி நேரத்திற்குள் ரஷ்யா இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது. சர்வதேச சமூகத்தோடு ரஷ்யாவின் அணுகுமுறை இதுதான், ரஷ்யா நாளுக்கும் அம்பலப்படுகிறது என ஜெலென்ஸ்கி காட்டமாக தெரிவித்துள்ளார்.
குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், ராக்கெட் ஒன்று அவர் தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு அருகில் விழுந்து மோதியதாகவும், ஆனால் அவரது குழு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான செயலின் மூலம் உக்ரைன், ஐரோப்பா மற்றும் சர்வதேச சமூகம் மீது ரஷ்யா தனது முரட்டுத்தனமான அணுகுமுறையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா.