இறப்பை நல்ல விடயமாக கருதி உயிரை கொடுக்கும் கும்பல்! ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றியதால் உலகளவில் ஏற்பட்ட ஆபத்து... எச்சரிக்கை தகவல்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் உலகின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் துணிவுடன் செயல்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கையை ஐ.நா சபை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டோனியோ கூறுகையில், ஆப்கனில் தாலிபான் பெற்ற வெற்றியை பார்த்து, உலகின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் துணிவுடன் செயல்படும் ஆபத்து உள்ளது.
உதாரணமாக, ஆப்ரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில் பயங்கர வாத சவாலை எதிர்கொள்ளும் அளவிற்கு அங்கு பாதுகாப்பு கட்டமைப்பு இல்லை. இறப்பை நல்ல விஷயமாக கருதி எந்த சூழலிலும் உயிரைக் கொடுக்கும் கும்பல், அது சிறியதாகவே இருப்பினும், அதன் முன் ராணுவம் கூட நிற்க முடியாது.
இதை ஆப்கானிஸ்தான் சம்பவம் உணர்த்தியுள்ளது. ஏழு நாட்களில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் மாயமாகி விட்டனர். பயங்கரவாதத்திற்கு எதிராக பல நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பது கவலை அளிக்கிறது.
அதனால், பயங்கர வாதத்திற்கு எதிரான நாடுகளின் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும். ஆப்கன், சர்வதேச உறவுகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கு பெற வேண்டும். அதற்கு தாலிபான்கள் அரசுடன் பேச்சு நடத்துவது தவிர்க்கமுடியாதது மற்றும் இன்றியமையாதது என கூறியுள்ளார்.