2020-ல் 8,500 குழந்தைகள் ஆயுத படையினராக பயன்படுத்தப்பட்டுள்ளனர் - அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்ட ஐ.நா
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல்வேறு மோதல்களில் 8,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆயுத படையினராகப் பயன்படுத்தப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான பாதுகாப்பு கவுன்சிலுக்கு, ஐ.நா. தலைவர் அன்டோனியோ குடரெஸ் ஆண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
அதில், குழந்தைகளை கொல்வது, துன்புறுத்துவது மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், கடத்தல் அல்லது ஆட்சேர்ப்பு, உதவி அணுகல் மறுப்பு மற்றும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது ஆகிய, குழந்தைகளுக்கு எதிரான அனைத்து மீறல்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2020-ஆம் ஆண்டில் மொத்தம் 21 மோதல்களில் 19,379 குழந்தைகளுக்கு எதிராக மீறல்கள் நடந்துள்ளன.
சோமாலியா, காங்கோ, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் 2020-ஆம் ஆண்டில் அதிக மீறல்கள் நடந்தன.
கடந்த ஆண்டு 8,521 குழந்தைகள் படையினராகப் பயன்படுத்தப்பட்டனர், மேலும் 2,674 குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் 5,748 பேர் பல்வேறு மோதல்களில் காயமடைந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.