இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தந்தை: மனைவி வழங்கிய திடுக்கிடும் தகவல்
உத்தரப்பிரதேசத்தில் இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தை
உத்தரபிரதேசம் கான்பூரை சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபரான குழந்தைகளின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் மனைவியான ரேஷ்மா, தன்னுடைய கணவர் குறித்த பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய கணவர் மது பிரியர் என்றும் குடித்து விட்டு தன்னை உடல்ரீதியாக பலமுறை துன்புறுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
தன்னுடைய மகனுடன் பெற்றோர் வீட்டில் இருந்த ரேஷ்மா 9 மாதங்களுக்கு பிறகு கணவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
சனிக்கிழமை இரவு குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக உணவு அருந்திய நிலையில், மகள் இரண்டு பேரையும் தந்தை தன்னுடன் உறங்குவதற்காக அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அதிகாலையில் இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், தந்தையே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் தந்தையை கொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகள் இருவரின் கழுத்திலும் ஆழமான வெட்டுக் காயங்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |