அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் வேண்டாம்... உக்ரைன் போரை தீவிரப்படுத்த புடினுக்கு அழுத்தம்
சமீப நாட்களாக உக்ரைன் கை ஓங்குவதை அடுத்து, ராஜதந்திரத்தைக் கைவிட்டு, போரை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ரஷ்ய கடும்போக்கு தேசியவாதிகள் அழுத்தமளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குறுதி தோல்வி
ரஷ்யாவின் முதன்மையான நகரங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதை அடுத்தே, சாதகமான நிபந்தனைகளின் பேரில் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்கா அளித்த வாக்குறுதி தோல்வியடைந்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.

உக்ரைன் மீது கடுமையான நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகள் புதிதல்ல. போர் தொடங்கியதில் இருந்தே, நீண்ட காலமாக இந்தத் தேசியவாதிகள் முழுமையான அணிதிரட்டலுக்கும், உக்ரைனின் முதன்மையான அரசாங்கப் பகுதியை அழிப்பதற்கும்,
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியைக் கொலை செய்வதற்கும், ஐரோப்பிய ட்ரோன் தொழிற்சாலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் புடினுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மட்டுமின்றி, சில கடும்போக்கு தேசியவாதிகள், தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்குமாறும் ஜனாதிபதி புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால், மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் கிரீமியா ஆகிய முதன்மையான நகரங்களைக் குறிவைத்தும், பயணிகள் பேருந்துகள் மீதான இரண்டு கொடிய தாக்குதல்கள் என்று ரஷ்யா குறிப்பிட்ட சம்பவங்கள் உட்பட, இந்த மாதம் உக்ரைன் நடத்திய வலுவானத் தாக்குதல்கள் அந்த கோரிக்கைகளை மேலும் பலப்படுத்தி தீவிரப்படுத்தியுள்ளன.
இதனிடையே, உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களின் வீச்சு மற்றும் தாக்கம் குறித்த அதிகரித்து வரும் கலக்கத்தையும், ரஷ்யா எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய விரிவான விவாதத்தையும் இந்த அதிகரித்து வரும் கடுமையான அழுத்தங்கள் பிரதிபலிக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
போர் என்றால் எந்த விலை கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும். உக்ரேனியர்கள் போரில் இருக்கிறார்கள், அதனால் தங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு போராடுகிறார்கள் என தேசியவாத தொழிலதிபர் ஒருவர் கொந்தளித்துள்ளார்.

மேலும், நம் முன்னோர்கள், தேசத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தி, துல்லியமாக இந்த நோக்கத்திற்காகவே உருவாக்கிச் சேமித்து வைத்திருந்த அணு ஆயுதங்களை நாம் ஏன் பயன்படுத்துவதில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, சில தேசியவாதிகள், அமெரிக்காவிற்கு எதிரான ஈரானின் செயல்திறன் மிக்க இராணுவ மற்றும் இராஜதந்திர உத்திகளை ரஷ்யா பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
வியூகத்தில் நம்பிக்கை
சிலர், குண்டுவீச்சு மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை வாழத் தகுதியற்றதாக மாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு, உக்ரேனிய அரசை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியில் இறங்க வேண்டிய நேரம் இது என பலர் கோருகின்றனர்.

ஆனால், புடினால் இதுபோன்ற தேசியவாதக் கருத்துகளைப் பொறுத்துக்கொள்ள முடியும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் 26 ஆண்டுகளாகக் கட்டமைத்த, இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பின் உச்சத்தில் அமர்ந்திருக்கிறார்,
மேலும் தேசியவாத வலைப்பதிவர்கள் சில விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். தேசியவாதிகளின் அழுத்தத்திற்கு பணிந்து முடிவெடுப்பவரல்ல புடின் எனவும், உக்ரைனின் கை சமீபத்திய நாட்களாக ஓங்கியிருந்தாலும், ஒரு சாத்தியமான இராஜதந்திரத் தீர்வுக்கான கதவை மாஸ்கோ இன்னமும் திறந்து வைக்க விரும்புவதாகவே ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போதைக்கு, புடின் தனது தற்போதைய வியூகத்தில் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. டான்பாஸ் பிராந்தியத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, கிழக்கு உக்ரைனில் உள்ள கோஸ்ட்யான்டினிவ்கா நகரை ரஷ்யா கைப்பற்றுவதற்கு மிக அருகில் இருப்பதாக, அவர் செவ்வாயன்று இராணுவப் பயிற்சிப் பள்ளி பட்டதாரிகளிடம் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய அரசியல் சக்திகள், அவர்களை விடவும் நியாயமானவர்கள் என்று அவர் கருதும் எதிரிகளால் ஓரங்கட்டப்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |