கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா
அமெரிக்காவின் மிக முக்கியமான வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கு பகுதிக்கு விரைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கிற்கு விரையும் அமெரிக்க உயர் அதிகாரிகள்
ஈரானுடனான போர் நடவடிக்கையால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் உருவாகி வருகிறது.
பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மற்றொரு புறம் ராணுவ நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வருகின்றன.
வெளியான புதிய தகவல்கள் படி, அமெரிக்காவின் 82-வது வான் வழி பிரிவின் உயர் அதிகாரிகள் குழு மத்திய கிழக்கு பகுதிக்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOX செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில், அமெரிக்காவின் முக்கிய தளபதி பிராண்டன் டெக்ட்மியர் மற்றும் அவரது கட்டளை குழு மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு விரைந்து செல்ல உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த இராணுவ கட்டளை குழுவின் குறிப்பிட்ட பணி என்னவென்று இதுவரை தகவல் வெளியாகவில்லை, பென்டகனும் இதுவரை இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் உறுதிப்படுத்தவில்லை.
கார்க் தீவுக்கு குறி
அமெரிக்காவின் இந்த மிகப்பெரிய இராணுவ தயார் நிலை, ஈரானின் முக்கிய எரிசக்தி மையமான கார்க் தீவை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.
82-வது வான் வழி பிரிவு என்பது உலகின் எந்தவொரு பகுதிக்கும் வெறும் 18 மணி நேரத்திற்குள் விரைந்து சென்று களத்தில் போராடும் வல்லமை கொண்டது.
ஒரு முழுமையான போர் முன்னெடுக்கப்படாவிட்டாலும், அமெரிக்காவின் எலைட் விமானப்படை தலைவர்கள் இந்த பிராந்தியத்தில் இருப்பது எதிரி நாட்டிற்கு மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |