உக்ரைனை விட்டு அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்க அதிபர் அதிரடி உத்தரவு!
உக்ரைன் ரஷ்யா இடையே கடுமையான போர் பதற்றம் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கர்களை உடனடியாக உக்ரைன் விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் நேட்டோ அமைப்புடன் தங்கள் நாட்டைக்கும் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, ரஷ்யா தனது வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன் தனது படைகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் குவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. ரஷ்யாவின் சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், உக்ரைன் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் என்பிசி செய்திக்கு அளித்த பேட்டியில் உக்ரைன் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளிவருவது நல்லது. போர்ப்பதற்றம் அதிகரித்த பின் வெளியேறுவதில் அதிக சிக்கல் வரக்கூடும் என்பதால் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த பதற்றம் ஒன்றும் ஒரு சிறிய பயங்கரவாத அமைப்புடன் அல்ல, இது உலகின் மிகப் பெரிய படைகளில் ஒன்றை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். இது மிகவும் வித்தியாசமான சூழ்நிலை எனவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனுக்குள் போர் தொடுத்த பின் அமெரிக்கர்களை மீட்பது என்பது உலகப்போருக்கு வழிவகுக்கும் எனவும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ளவது என்பது உலகில் மிக பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.