கடலில் 15 மணிநேரமாக போராடிய இளைஞர்: கப்பலில் இருந்து விழுந்தால் ஏற்பட்ட பரிதாபம்
மெக்சிகோவின் கோசுமெல் நகரை நோக்கி சென்று கொண்டு இருந்த கப்பலில் இருந்து தவறி விழுந்த நபர் ஒருவர், 15 மணி நேரங்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கப்பலில் இருந்து விழுந்த பயணி
நியூ ஆர்லியன்ஸில் இருந்து மெக்சிகோவின் கோசுமெல் நகருக்குச் சென்று கொண்டு இருந்த கப்பலில் 28 வயதான நபர் ஒருவரை காணவில்லை என்று வியாழக்கிழமை நண்பகல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கார்னிவல் குரூஸ் லைன் கப்பலின் கூற்றுப்படி, அவர் தனது சகோதரியுடன் புதன்கிழமை மாலை கப்பலில் உள்ள மதுபான கூடத்தில் காணப்பட்டுள்ளார். ஆனால் அதன் பிறகு அவரை பார்க்க முடியாததை உணர்ந்த சகோதரி, மறுநாள் காலை தனது சகோதரரை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
Carnival Valor cruise ship- கார்னிவல் வேலர் பயணக் கப்பல்(Getty)
இதையடுத்து கப்பல் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, கடலோர காவல்படையினரும் உஷார் படுத்தப்பட்டனர்.
15 மணி நேரங்களுக்கு பிறகு மீட்பு
28 வயது மதிப்புடைய நபர் ஒருவரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஒரு சரக்கு கப்பல் தென்மேற்கு கணவாய், லூசியானா மற்றும் மிசிசிப்பி ஆற்றின் முகப்பில் இருந்து 20 மைல் (32 கிலோமீட்டர்) தெற்கே தண்ணீரில் ஒரு நபர் மிதப்பதை கண்டுபிடித்தது.
இதனை தொடர்ந்து இரவு 8.25 மணியளவில் அந்த நபரை அமெரிக்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்த போது, அந்த நபர் காணாமல் போன கப்பல் பயணி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
US Coast Guard/CNN
கடலோர காவல்படை லெப்டினன்ட் சேத் கிராஸ் தெரிவித்த தகவலில், கடலில் இருந்து மீட்கப்பட்ட நபர் லேசான தாழ்வெப்பநிலை, அதிர்ச்சி, நீரிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் ஒட்டுமொத்தமாக அவரது உடல்நிலை சமநிலையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
அவர் தண்ணீரில் எவ்வளவு நேரம் இருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் கடலோர காவல்படையினர் அது 15 மணிநேரம் வரை இருந்திருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.