வர்த்தகப் போர் முடிவுக்கு வருமா? லண்டனில் அமெரிக்கா - சீனா பேச்சுவார்த்தை!
லண்டனில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சுவார்த்தை
லண்டனில் ஜூன் 9ம் திகதி உலகின் இரு பெரிய பொருளாதாரங்களான அமெரிக்கா மற்றும் சீனா இடையே முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் வர்த்தகப் போருக்கு ஒரு தீர்வை எட்டும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
தீவிரமடைந்த வர்த்தகப் போர்
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, சீனா உட்படப் பல நாடுகள் மீது வரி விதிப்புகளை அதிகரித்தார்.
குறிப்பாக, சீனா மீது 34% வரி விதித்தார். இதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் பொருட்கள் மீது சீனாவும் வரி விதித்தது. இந்த வர்த்தகப் போரில், அமெரிக்கா சீனா மீது 145% வரியையும், சீனா அமெரிக்கா மீது 125% வரியையும் உயர்த்தும் நிலைக்குச் சென்றது.
இதனால் உலகளாவிய பங்குச் சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இறுதியாக, இரு நாடுகளும் 90 நாட்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைக்க பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன.
சமரச முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தை
இந்த வரிப் போரைக் கைவிட இரு நாடுகளின் தலைவர்களும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசி வழியே பேசினர். இந்த உரையாடல் "மிக நேர்மறையாக" இருந்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, லண்டனில் அமெரிக்க-சீன அதிகாரிகள் அடுத்த வாரம் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி, நாளை (ஜூன் 9) லண்டனில் அமெரிக்க மற்றும் சீனத் தலைவர்கள் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள்
அமெரிக்கத் தரப்பில் கருவூல அமைச்சர் ஸ்காட் பெஸ்சென்ட், வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமீசன் கிரீர் உள்ளிட்ட அதிகாரிகள் சீனத் தலைவர்களுடன் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே $582 பில்லியன் வர்த்தகம் நடைபெற்ற நிலையில், வரிப் போரால் நடப்பு ஆண்டில் வர்த்தகம் வெகுவாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |