ஈரானை மீண்டும் கடுமையாக தாக்குவோம்: எச்சரித்துள்ள ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரானை மீண்டும் கடுமையாக தாக்க தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பூர்கென்ஸ்டாக் மலைப்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான், கத்தார் ஆகியவை மத்தியஸ்த நாடுகளாக பங்கேற்றன.

இருப்பினும், பேச்சுவார்த்தை தொடங்கிய அதே நேரத்தில், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆனால், அமெரிக்கா இந்தக் கூற்றை மறுத்து, 55 வணிகக் கப்பல்கள் சனிக்கிழமை அந்த நீரிணையை கடந்து சென்றதாக தெரிவித்தது.
மேலும் ட்ரம்ப், “ஈரான் தனது லெபனான் ஆதரவாளர்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், நாங்கள் ஈரானை மீண்டும் கடுமையாக தாக்குவோம்” என்று எச்சரித்தார்.

இதேவேளை, துணை ஜனாதிபதி வான்ஸ், “இவை சற்றே குழப்பமான சூழ்நிலையாகும். ஆனால், அமைதியை நிலைநாட்டும் நோக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தாலும், சமீபத்திய நாட்களில் சற்றே அமைதி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டத்தில் ஈரானின் அணு திட்டம் மற்றும் பொருளாதார நன்மைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் கூறியிருப்பது உலக எண்ணெய் விலைகளில் மீண்டும் அதிர்வுகளை ஏற்படுத்தும் அபாயம் நிலவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |