எந்த நாடும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கலாம்: புதிய 30 நாள் சலுகை அறிவித்த ட்ரம்ப்
கடலில் தற்போது தேங்கியிருக்கும், தடை விதிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு, நாடுகளுக்கு 30 நாட்கள் சலுகையை அமெரிக்கா வழங்கியுள்ளது.
விலைகளை கட்டுப்படுத்த
ஈரான் போரால் பல நாடுகள் எண்ணெய் தட்டுப்பாட்டால் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், அமெரிக்கா இந்த விலக்கு அளித்துள்ளது.

அமெரிக்காவின் விலக்கு அறிவிப்பைத் தொடர்ந்து, ஆசியாவில் வெள்ளிக்கிழமை காலையில் எண்ணெய் விலைகள் குறைந்தன. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் ஈரானின் அடுத்தடுத்த எதிர்வினை உள்ளிட்டவை பிராந்திய பதட்டங்களை அதிகப்படுத்தியது.
மட்டுமின்றி ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்தது, மத்திய கிழக்கில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி சீர்குலைந்து எரிசக்தி விலைகள் உயர்ந்த நிலையில், விலைகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மேற்கொண்ட சமீபத்திய முயற்சி இதுவாகும்.
ஈரானில் நிலவும் போரின் விளைவாக விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, தனது உத்திசார் எண்ணெய் இருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்கப்போவதாக அமெரிக்கா புதன்கிழமையன்று அறிவித்தது.
அந்த விடுவிப்பு, 32 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச எரிசக்தி முகமை, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிப்பதற்கான தனது தீவிர உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக அமைந்தது.

இதனிடையே, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரானது, வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் விநியோக இடையூறை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாக சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.
124 மில்லியன் பீப்பாய்கள்
இந்த நிலையில், வியாழக்கிழமையன்று அமெரிக்காவால் வழங்கப்பட்ட சலுகையானது, மார்ச் 12 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விற்பனையை அங்கீகரிக்கிறது; இந்த உரிமம் ஏப்ரல் 11 அன்று அமெரிக்க நேரப்படி நள்ளிரவு வரை செல்லுபடியாகும்.
இதனிடையே, அமெரிக்கா அறிவித்துள்ள இந்த 30 நாட்கள் சலுகையால் ரஷ்யா குறிப்பிடத்தக்க ஆதாயமடைய வாய்ப்பில்லை என்றே அமெரிக்கா தரப்பில் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை நிலவரப்படி, உலகளவில் 30 வெவ்வேறு இடங்களில் சுமார் 124 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெய் கப்பல்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாகத் தினமும் ஏற்படும் எண்ணெய் இழப்பைக் கணக்கில் கொள்ளும்போது, அமெரிக்க உரிமமானது சுமார் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கான விநியோகத்தை வழங்கும் என்றே கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவிற்கு இப்படியான ஒரு சலுகையை ட்ரம்ப் நிர்வாகம் மார்ச் 5 ஆம் திகதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |